ரம்ஜான், வார விடுமுறை தினங்கள்: தமிழகம் முழுவதும் 1,265 சிறப்பு பஸ்கள் இயக்கம்

ரம்ஜான் மற்றும் வார விடுமுறை தினங்களை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 1,265 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் ஆர்.மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

ரம்ஜான் பண்டிகை வருகிற 11-ந் தேதி கொண்டாடப்படுவதையொட்டியும், 13, 14-ந் தேதிகள் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை நாட்களை முன்னிட்டும் சென்னையில் இருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களில் இருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 10-ந் தேதி (இன்று) 315 பஸ்களும் 12-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று 290 பஸ்களும், 13-ந் தேதி (சனிக்கிழமை) 340 பஸ்களும் இயக்கப்படுகின்றன. இதே போன்று, சென்னை கோயம்பேட்டில் இருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இயக்கப்படுகிறது.

10 -ந் தேதி (40 பஸ்கள்), 12-ந் தேதி (40 பஸ்கள்) மற்றும் 13-ந் தேதிகளில் (40 பஸ்கள்) என 120 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இது தவிர, ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com