நிர்பயா நிதியை கையாள்வது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்காக மத்திய அரசிடமிருந்து பெறப்படும் நிர்பயா நிதியை கையாள்வது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
நிர்பயா நிதியை கையாள்வது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
Published on

சென்னை

சென்னை உயர் நீதிமன்றத்தில் வக்கீல் சூரியபிரகாசம் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான செலவினங்களுக்காக நிர்பயா நிதியம் என்ற நிதியத்தை மத்திய அரசு உருவாக்கியது. இந்த நிதியத்திற்கு, ஆரம்ப கட்டமாக 10 ஆயிரம் கோடியை மத்திய அரசு ஒதுக்கியது. இந்த நிதியம், அனைத்து மாநிலங்களுக்கும் நிதியை ஒதுக்கி வருகிறது.

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக நிர்பயா திட்டத்தின் கீழ் கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழக அரசுக்கு ஒதுக்கப்பட்ட 190 கோடியில் வெறும் 6 கோடி மட்டும் செலவு செய்யப்பட்டுள்ளது. மீத தொகையை மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பிவிட்டதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதியை 100 சதவீதம் செலவிடுவதை உறுதி செய்ய உயர்மட்டக் குழு அமைக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கோரியுள்ளார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, நிர்பயா நிதியை தமிழக அரசு பயன்படுத்தி வருவதாக அரசுத்தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

பள்ளிகளில் சரியான மற்றும் முறையற்ற தொடுதல்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. மனு தொடர்பாக மார்ச் 3-ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com