டாஸ்மாக் பணியாளர்களுக்கான ரூ.2 ஆயிரம் ஊதிய உயர்வு அமல்

ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான 3 மாத நிலுவைத்தொகையை உடனே வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் பணியாளர்களுக்கான ரூ.2 ஆயிரம் ஊதிய உயர்வு அமல்
Published on

சென்னை,

தமிழகத்தில் செயல்படும் டாஸ்மாக் கடைகளில் 6 ஆயிரத்து 567 மேற்பார்வையாளர்கள், 14 ஆயிரத்து 636 விற்பனையாளர்கள் மற்றும் 2 ஆயிரத்து 426 உதவி விற்பனையாளர்கள் தொகுப்பூதிய முறையில் பணியாற்றி வருகின்றனர்.

இவர்களுக்கு 1.4.2025 முதல் மாதம்தோறும் ரூ.2 ஆயிரம் உயர்த்தி வழங்கப்படும் என சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. இதற்காக ஆண்டொன்றுக்கு ரூ.64.08 கோடி கூடுதல் செலவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த ஊதிய உயர்வுக்கு கடந்த 24.4.2025 அன்று நடந்த டாஸ்மாக் நிர்வாகக்குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அதன்படி, டாஸ்மாக் நிறுவனத்தில் பணியாற்றும் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்களுக்கு அவர்கள் பெற்று வரும் தொகுப்பூதியத்துடன் மாதம்தோறும் ரூ.2 ஆயிரம் வழங்க அனைத்து முதுநிலை மண்டல மேலாளர்கள் மற்றும் மாவட்ட மேலாளர்களுக்கும் டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.2,000 ஊதிய உயர்வு ஏப்ரல் 1-ம் தேதி முதல் வழங்கப்படும் என மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்தார்.

அந்த வகையில், டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டிலை கூடுதலாக ரூ.10 அல்லது அதற்கு மேல் விற்பனை செய்த புகாரில் சிக்கிய 451 பணியாளர்களைத் தவிர, அனைத்து டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்களுக்கு ரூ.2,000 ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது.

மேலும், மதுபாட்டிலை கூடுதலாக ரூ.10 அல்லது அதற்கு மேல் விற்பனை செய்து விதி மீறலில் ஈடுபட்ட 451 ஊழியர்களுக்கு ரூ.1,000 ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது. இந்த ஊதிய உயர்வு ஏப்ரல் மாதம் முதல் முன் தேதியிட்டு இரண்டு நாட்களுக்குள் வழங்கப்படும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com