கோவிலுக்கு வந்த சேகர்பாபு கார் தடுத்து நிறுத்தம்... என்ன நடந்தது திருத்தணியில்!

சேகர்பாபுவின் கார், திருத்தணி கோவில் மலை அடிவாரத்தில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவிலுக்கு வந்த சேகர்பாபு கார் தடுத்து நிறுத்தம்... என்ன நடந்தது திருத்தணியில்!
Published on

திருத்தணி,

ஆடி கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு திருத்தணி முருகன் கோவிலுக்கு குடும்பத்தினருடன் சுவாமி தரிசனத்திற்கு வந்த முன்னாள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான பி.கே. சேகர்பாபுவின் கார், மலை அடிவாரத்தில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவிலில் பலத்த பாதுகாப்பு

ஆடி கிருத்திகையையொட்டி திருத்தணி முருகன் கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவடிகளுடன் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதையடுத்து கோவிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், சேகர்பாபு தனது குடும்பத்தினருடன் கோவிலுக்கு வந்தபோது, பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் அவரது வாகனத்தை மலை அடிவாரத்திலேயே நிறுத்தினர். தனது வாகனத்திற்கு கார் பாஸ் இருப்பதுடன், தாம் எம்.எல்.ஏ. என்பதையும் சுட்டிக்காட்டி மேலே செல்ல அனுமதிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.

போலீசாருடன் வாக்குவாதம்

ஆனால், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) அனுமதி கிடைத்தால் மட்டுமே வாகனத்தை மேலே அனுமதிக்க முடியும் என்று போலீசார் தெரிவித்தார். இதையடுத்து சேகர்பாபு மற்றும் போலீசாருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

கார் பாஸ் வைத்திருந்த பிற வாகனங்கள் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில், சேகர்பாபுவின் வாகனம் மட்டும் தடுத்து நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. கோவில் அறங்காவலர்கள் எடுத்துக்கூறியும் உடனடியாக அனுமதி வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

பரபரப்பு நிலவியது

சுமார் 30 நிமிடங்களுக்கும் மேலாக மலை அடிவாரத்தில் காத்திருந்த பின்னர், மாவட்ட எஸ்.பி. சாய் பிரணீத்தின் அனுமதி கிடைத்ததைத் தொடர்ந்து சேகர்பாபுவின் வாகனம் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் கோவில் வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

X

Daily Thanthi
www.dailythanthi.com