செந்தில் பாலாஜி மீதான பண மோசடி வழக்கு: ஏப்ரல் 4ம் தேதிக்கு ஒத்திவைப்பு

செந்தில் பாலாஜி உள்பட 47 பேர் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜி மீதான பண மோசடி வழக்கு: ஏப்ரல் 4ம் தேதிக்கு ஒத்திவைப்பு
Published on

சென்னை,

போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு தொடர்ந்தது. இதை தொடர்ந்து செந்தில் பாலாஜி உள்பட 47 பேர் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் இருந்து செந்தில் பாலாஜி உள்ளிட்டோரை விடுவித்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவை ரத்து செய்த சுப்ரீம் கோர்ட்டு, வழக்கை செப்டம்பர் 30 தேதிக்குள் விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டது.

இதனையடுத்து விசாரணை நடத்திய மத்திய குற்றபிரிவு போலீசார், செந்தில் பாலாஜிக்கு எதிராக சென்னை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள எம்.பி-எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கூடுதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.

அதில் அரசு அதிகாரிகள், போக்குவரத்து ஊழியர்கள் என சுமார் 900 பேர் வரை குற்றபத்திரிகையில் குற்றவாளி என சேர்த்துள்ளதாக கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கில் குற்றம்சாட்டபட்ட இன்னும் சிலரை விசாரிக்க அனுமதி மற்றும் ஒப்புதல் கடிதம் அரசிடம் இருந்து கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஜெயவேல் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கூடுதல் குற்றப்பத்திரிகையை ஏற்று வழக்கை நடத்துவதற்கான அனுமதி இன்னும் தமிழக அரசிடம் இருந்து கிடைக்கவில்லை என மீண்டும் தெரிவித்தார். இதையடுத்து வழக்கின் விசாரணை ஏப்ரல் 4-ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com