டேட்டிங் செயலியில் பழகியவரை நம்பி போன நாகர்கோவில் என்ஜினியருக்கு காத்திருந்த அதிர்ச்சி

செயலி மூலமாக சில நபர்கள், வினுகுமாரை தொடர்பு கொண்டு பேசி யுள்ளனர்.
டேட்டிங் செயலியில் பழகியவரை நம்பி போன நாகர்கோவில் என்ஜினியருக்கு காத்திருந்த அதிர்ச்சி
Published on

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள உண்ணாமலைக்கடை பெருங்குழி பகுதியைச் சேர்ந்தவர் வினுகுமார் (39). கட்டுமான பொறியாளரான இவர், செல்போனில் பயன்படுத்தக்கூடிய டேட்டிங் செயலி ஒன்றை சமூக வலைதள பக்கம் மூலமாக பார்த்தார்.அந்த செயலி மூலம் சில நபர்கள் வினுகுமாரை தொடர்பு கொண்டு பேசினர். அவர்கள் நேரில் சந்திக்கலாம் என்று கூறி பள்ளியாடி அருகே உள்ள குழிக்கோடு பகுதிக்கு அழைத்தனர். அதன்பேரில் வினுகுமாரும் நேற்று மாலை அந்த இடத்துக்கு சென்றார்.

அப்போது அந்த இடத்தில் மறைவாக பதுங்கியிருந்த 3 பேர் வினுகுமாரை வழிமறித்து நிறுத்தினர். பின்னர் அவரது செல்போனை பறித்தனர். மேலும் அவரை சரமாரியாக தாக்கி, பணம் கேட்டு மிரட்டினர். இதனால் பயந்துபோன வினுகுமார், தன்னிடம் இருந்த ஆயிரம் ரூபாயை அந்த நபர்களிடம் கொடுத்தார்.

இதையடுத்து அந்த நபர்கள், வினுகுமாரிடம் பறித்த பணம் மற்றும் செல்போனுடன் அங்கிருந்து சென்றுவிட்டனர். தாக்குதலில் காயமடைந்த வினுகுமார் சிகிச்சைக்காக தக்கலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தன்னை 3 நபர்கள் தனியாக வரவழைத்து தாக்கி, பணம் மற்றும் செல்போனை பறித்ததாக அவர் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், வினுகுமாரை டேட்டிங் செயலி மூலம் வரவழைத்து தாக்கி பணம் மற்றும் செல்போனை பறித்தவர்கள் பள்ளியாடியைச் சேர்ந்த சாலமன் பிரபு (29), வென்டார்வின் மற்றும் இன்னொருவர் என தெரியவந்தது.தலைமறைவாக உள்ள அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். டேட்டிங் செயலியை பயன்படுத்திய பொறியாளரை தனியாக வரவழைத்து தாக்கி பணம், செல்போன் பறித்த சம்பவம் தக்கலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com