ஞாயிறு விடுமுறை; கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்...!

ஞாயிறு விடுமுறையை முன்னிட்டு கன்னியாகுமரியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.
ஞாயிறு விடுமுறை; கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்...!
Published on

கன்னியாகுமரி,

இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்து உள்ள கன்னியாகுமரி உலகப் புகழ் பெற்ற சர்வதேச சுற்றுலா நகரமாகும். இங்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

இங்கு வருடம் முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து சென்றாலும் சீசன் காலங்களில் மட்டும் வழக்கத்தைவிட அதிகமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு படையெடுத்து வந்த வண்ணமாக இருப்பார்கள். கன்னியாகுமரியில் சபரிமலை சீசன் மற்றும் கோடை விடுமுறை சீசன் முடிந்த நிலையில் சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் குறைந்து வண்ணமாக இருந்தது.

இருப்பினும் வாரத்தின் கடைசி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாட்களிலும் பண்டிகை கால விடுமுறை நாட்களிலும் கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவில் காணப்படுகிறது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று கன்னியாகுமரிக்கு சுற்றுலாபயணிகள் வருகை அதிகரித்து உள்ளது.

குறிப்பாக கேரளா மற்றும் வடமாநில சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. இதனால் இன்று அதிகாலை கன்னியாகுமரி கடலில் சூரியன் உதயமாகும் காட்சியை காண முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம், சங்கிலித் துறை கடற்கரை பகுதியிலும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு கிழக்கு பக்கம் உள்ள கிழக்கு வாசல் கடற்கரை பகுதியிலும் சுற்றுலா பயணிகள் திரண்டு இருந்தனர்.

அதேபோல கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்ப்பதற்காக படகு துறையிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. படகு துறையில் சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் 2 மணி நேரம் காத்து நின்று  பயணம் செய்து விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் பார்வையிட்டு திரும்பினர்.

கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கும் விவேகானந்தர் மண்டபத்துக்கு இடையே கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நடக்கவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் திருவள்ளுவர் சிலையை பார்வையிட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

மேலும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில், விவேகானந்த கேந்திர வளாகத்தில் அமைந்துள்ள பாரத மாதா கோவில் ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம், காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், அரசு அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம், மீன்காட்சி சாலை, சுற்றுச்சூழல் பூங்கா, வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலா தளங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

சுற்றுலா பயணிகள் வருகை திடீரென்று அதிகரித்ததால் கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. கடலோர பாதுகாப்பு குழும போலீசார், சுற்றுலா போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.    

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com