

தர்மபுரி,
தர்மபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி அருகே ஜெல்திம்மனூர் கிராமத்தை சேர்ந்தவர் பாக்கியராஜ் (38 வயது). சென்னை பூ மார்க்கெட் தொழிலாளி. இவரது மனைவி நிவேதிதா (28 வயது). இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். பாக்கியராஜ் சென்னையில் இருந்து அவ்வப்போது ஊருக்கு வந்து மனைவி மற்றும் குழந்தைகளை பார்த்து விட்டு செல்வது வழக்கம்.
இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மனைவியின் நடத்தை மீது பாக்கியராஜுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக நிவேதிதா கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி மாவட்டம் கோணம்பட்டியில் இருக்கும் பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதைத்தொடர்ந்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரை சமாதானப்படுத்தினார்கள்.
பின்னர் கடந்த பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் மீண்டும் கணவர் வீட்டிற்கு நிவேதிதாவை பெற்றோர் அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த பாக்கியராஜ் கத்தியால் நிவேதிதாவின் கழுத்தை அறுத்தார். இதில் ரத்த வெள்ளத்தில் நிவேதிதா பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து பாக்கியராஜ் பஞ்சப்பள்ளி போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். இதுதொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார், பாக்கியராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.