

சென்னை,
தமிழக அரசியல் களத்தில் சீமான், கிருஷ்ணசாமி, வேல்முருகன் ஆகியோர் புதிய கூட்டணியாக இணைந்து இடைத்தேர்தலில் ஒன்றாக களம் இறங்குகிறார்கள்.
தமிழக அரசியல் களத்தில் தி.மு.க, அ.தி.மு.க. ஆகிய 2 கட்சிகளுக்கும் மாற்றாக பல்வேறு அரசியல் கட்சிகள் முளைத்து தங்களது பணிகளை தீவிரமாக செய்தபோதிலும், அதற்கு வெற்றி கிடைக்கவில்லை. அதே நேரத்தில் த.வெ.க. தமிழக அரசியலில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தி வெற்றி பெற்றுள்ளது. தமிழக அரசியல் களத்தில் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக வேறு எந்த கட்சிகளும் செய்யாத சாதனைகளை முதல்-அமைச்சர் விஜய் செய்து காட்டியிருப்பதாகவே அரசியல் நோக்கர்கள் கருத்துகளை தெரிவித்து உள்ளனர்.
தி.மு.க, அ.தி.மு.கவுக்கு மாற்றாக இதற்கு முன்பு பல்வேறு கூட்டணிகள் அமைக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக முதல்-அமைச்சர் வேட்பாளராக விஜயகாந்தை முன்னிறுத்தி உருவாக்கப்பட்ட மக்கள் நலக்கூட்டணி தோல்வியையே தழுவியது.
இந்த நிலையில் சட்ட மன்ற தேர்தலுக்குப் பிறகு சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி, கிருஷ்ணசாமி தலைமையிலான புதிய தமிழகம் மற்றும் வேல்முருகன் தலைமையிலான தமிழக வாழ்வுரிமை கட்சி ஆகியவை ஒன்றாக இணைந்து செயல்பட்டு வருகின்றன. சட்டமன்ற தேர்தலின்போது அ.தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி அது தோல்வியில் முடிந்த நிலையில் கிருஷ்ணசாமி குறிப்பிட்ட தொகுதிகளில் தனித்து போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.
தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த வேல்முருகனும் கூட்டணியில் இருந்து வெளியேறி தனித்து போட்டியிட்டார். நாம் தமிழர் கட்சி எப்போதும் போல தனித்து களம் கண்டது. இந்த தேர்தலில் விஜய் ஏற்படுத்திய தாக்கத்தால் தி.மு.க, அ.தி.மு.க. ஆகிய கட்சிகளே பின்னுக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில் மற்ற கட்சிகளும் படுதோல்வியை தழுவின.
இந்த நிலையில் தான் தமிழக அரசியல் களத்தில் புதிதாக சீமான், வேல்முருகன், கிருஷ்ணசாமி ஆகியோர் பல்வேறு கட்சிகள் அமைப்புகளோடு புதிய கூட்டணியை ஏற்படுத்தி இருக்கிறார்கள். வருகிற சட்டமன்ற இடைத்தேர்தலில் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளனர். இந்த கூட்டணி மாற்றத்தை ஏற்படுத்துமா? இல்லை இன்னொரு மக்கள் நலக் கூட்டணியாக இருக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.