டெலிவிஷன் வெடித்து தீப்பிடித்தது; மூதாட்டி உடல் கருகி சாவு

சத்தியமங்கலத்தில் டெலிவிஷன் வெடித்து தீப்பற்றியதில் மூதாட்டி உடல் கருகி பலியானார்.
டெலிவிஷன் வெடித்து தீப்பிடித்தது; மூதாட்டி உடல் கருகி சாவு
Published on

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கோட்டுவீராம்பாளையம் முனியப்பன் கோவில் வீதியை சேர்ந்தவர் குப்புசாமி (வயது 85). இவருடைய மனைவி சரஸ்வதி (75). இவர் சத்தியில் உள்ள ஓட்டலில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர்களுக்கு குழந்தை இல்லை. நேற்று முன்தினம் இரவு சரஸ்வதி வீட்டில் கட்டிலில் படுத்துக்கொண்டு டெலிவிஷன் பார்த்துக்கொண்டிருந்ததார். இரவு 11.30 மணி அளவில் திடீரென டெலிவிஷன் வெடித்து தீப்பிடித்ததாக கூறப்படுகிறது.

இந்த தீ அருகில் இருந்த சரஸ்வதியின் கட்டிலில் பற்றியதுடன், அவருடைய சேலையிலும் பற்றியது. மேலும் கரும்புகை வீட்டை சூழ்ந்தது. இதனால் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் சரஸ்வதி உடல் கருகி வீட்டின் உள்ளேயே விழுந்தார்.

உடல் கருகி சாவு

சரஸ்வதியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிச்சென்று வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது டெலிவிஷன் மற்றும் பொருட்கள் எரிந்து கிடந்ததுடன், சரஸ்வதி உடல் கருகிய நிலையில் கிடந்ததை பார்த்தனர்.

உடனே அவரை மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவ வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com