தூத்துக்குடி: மனைவி இறந்த சோகத்தில் கணவன் தூக்குப்போட்டு தற்கொலை

தூத்துக்குடியைச் சேர்ந்த லோடுமேன் ஒருவரின் மனைவி, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உடல்நலம் சரியில்லாமல் இறந்து விட்டார்.
தூத்துக்குடி ராமசாமிபுரம் 2வது தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் முத்து (வயது 59). இவரது மனைவி அன்னலட்சுமி. இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். முத்து திருச்செந்தூர் ரோட்டில் உள்ள பெயிண்ட் கம்பெனியில் லோடுமேனாக வேலை பார்த்து வந்தார்.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அவரது மனைவி அன்னலட்சுமி உடல்நலம் சரியில்லாமல் இறந்து விட்டாராம். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த முத்து 3 முறை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்துள்ளார். உறவினர்கள் அவரை மீட்டு காப்பாற்றியுள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு தனது வீட்டில் அவர் சேலையால் தூக்கு போட்டுக் கொண்டார்.
அப்போது வீட்டிற்கு வந்த அவரது மருமகன், அவரை மீட்டு ஆட்டோ மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதனையடுத்து அவரது உடல் பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திருமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.






