தூத்துக்குடி: கொலை வழக்கில் 3 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 19 கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 13.10.2019 அன்று தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் குறுக்குசாலை, அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த முருகேசன் மகன் விமல்ராஜ் (வயது 32) என்பவரை, முன்விரோதம் காரணமாக கொலை செய்த வழக்கில் மகிழ்ச்சிபுரம் பகுதியைச் சேர்ந்த அழகு மகன் நாகலிங்கம்(54), நாகலிங்கம் மகன் மணிகண்டன்(26), நாகலிங்கம் மகன் லட்சுமிநாராயணன்(25), ராஜகோபால்நகர் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி மகன் மாரிமுத்து(25), அதே பகுதியைச் சேர்ந்த சண்முகம் மகன் கொம்பையா(26), சின்னத்தம்பி மகன் அர்ஜுனா(19) மற்றும் மகிழ்ச்சிபுரம் பகுதியைச் சேர்ந்த முருகேசன் மகன் ராமகிருஷ்ணன்(27) ஆகியோரை சிப்காட் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி வன்கொடுமை விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வர்ஷித்குமார் இன்று (23.9.2025) குற்றவாளிகளான நாகலிங்கம், மணிகண்டன் மற்றும் லட்சுமிநாராயணன் ஆகிய 3 பேருக்கும் தலா இரட்டை ஆயுள்தண்டனை மற்றும் தலா ரூ.11 ஆயிரம் அபராதம் விதித்தும் மற்ற 4 குற்றவாளிகளில் அர்ஜுனா இறந்துவிட்ட நிலையில் மீதமுள்ள 3 பேரையும் விடுதலை செய்தும் உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கினார்.
இந்த வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கலைகதிரவன், குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் பொன்குமார், விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர் இளையராஜா ஆகியோரை தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பாராட்டினார்.
இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 19 கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.






