தூத்துக்குடி: காட்டுப் பகுதியில் பெண் தலை, உடல் தனித்தனியே மீட்பு- போலீஸ் விசாரணை

தூத்துக்குடி பண்டாரம்பட்டி, தேவாநகரில் உள்ள காட்டுப் பகுதியில் ஒரு மனித தலை மட்டும் தனியாக கிடப்பதாக சிப்காட் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.
தூத்துக்குடி பண்டாரம்பட்டி, தேவாநகரில் உள்ள காட்டுப் பகுதியில் ஒரு மனித தலை மட்டும் தனியாக கிடப்பதாக சிப்காட் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் சைரஸ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியதில் அது ஒரு பெண் தலை என்று தெரியவந்தது. பின்னர் அந்தப் பகுதியில் ஒரு முள் செடிக்குள் உடல் கிடந்தது.
இதனையடுத்து போலீசார் அந்த பெண்ணின் தலை மற்றும் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அவர் தூத்துக்குடி ஆதிபராசக்திநகரை சேர்ந்த ராஜு மனைவி அய்யம்மாள் (வயது 70) என்று தெரியவந்தது. இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ராஜு இறந்து விட்டதால் அய்யம்மாள் அவரது மகன் பராமரிப்பில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 4ம் தேதி வீட்டில் இருந்த அய்யம்மாள் காணாமல் போய்விட்டார். இதுகுறித்து அவரது மகன் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தார். இந்த நிலையில் அவர் காட்டுப் பகுதிக்குள் வந்தவர் மயங்கி விழுந்து இறந்திருக்கலாம் என்றும், நாய்கள் அவரது உடலை கடித்து குதறியதில் தலையை தனியாக எடுத்து 20 மீட்டர் தூரத்தில் போட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






