திருநெல்வேலி: சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து வாலிபர் பலி

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபர் நெல்லை சமாதானபுரத்தில் ஸ்டிக்கர் ஒட்டும் கடை நடத்தி வந்தார்.
சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் வாலிபர் பலி.
Published on

திருநெல்வேலி,

திருநெல்வேலி மாவட்டம், சிவந்திபட்டி பகுதியில் சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் வாலிபர் பலியானார். மேலும் 3 நண்பர்கள் படுகாயமடைந்தனர்.

நண்பர்கள்

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே கருங்குளம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த முருகன் மகன் அஸ்வின் (வயது 21). இவர் நெல்லை சமாதானபுரத்தில் வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் நண்பர்களான கருங்குளத்தைச் சேர்ந்த கணேசன்(22), செய்துங்கநல்லூரைச் சேர்ந்த செல்வக்குமார் மகன் சிவா(23), கோபி(22) ஆகியோர் பணியாற்றினர்.

கார் கவிழ்ந்து விபத்து

இவர்கள் நேற்று முன்தினம் இரவு கடையில் நீண்ட நேரம் வேலை பார்த்துவிட்டு, நள்ளிரவில் காரில் வீட்டுக்கு புறப்பட்டனர். காரை அஸ்வின் ஓட்டிச் சென்றதாக கூறப்படுகிறது. நெல்லை-திருச்செந்தூர் ரோட்டில் இந்திய புவியியல் ஆராய்ச்சி மையம் அருகில் சென்றபோது, கார் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கிய 4 பேரும் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடியவாறு கிடந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து, சிவந்திப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

வாலிபர் பலி

உடனே இன்ஸ்பெக்டர் ராபர்ட் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, காரின் இடுபாடுகளுக்குள் சிக்கிய 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி சிவா பரிதாபமாக இறந்தார். மற்ற 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து சிவந்திபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com