

சென்னை,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று கலைவாணர் அரங்கத்தில், 1971-ம் ஆண்டு நடைபெற்ற போரில் பாகிஸ்தானை இந்தியா வென்று, வங்கதேசம் என்ற தனிநாட்டை உருவாக்கிய வரலாற்று வெற்றியின் 50-வது ஆண்டு பொன்விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
இந்திய ராணுவத்திற்குத் தமிழர்கள் தொடர்ந்து தம்முடைய பங்களிப்பைச் செலுத்தி வருகின்றனர். மேலும், தாய்நாட்டிற்காக ராணுவ வீரர்கள் தம் இன்னுயிரையும் தியாகம் செய்ய தயங்குவதில்லை. அவர்களின் குடும்பங்களுக்கு உதவுவதில் தமிழ்நாடு எப்போதும் முன்னணியில் இருந்து வருகிறது.
வரலாற்று ரீதியாக பார்க்கும் போதும் தமிழ்நாடு எப்போதுமே நாடு காக்கும் பணிக்கு தம்மை அர்ப்பணித்து வருகிறது. 2-12-1962 அன்று சென்னை எஸ்.ஐ.ஏ.ஏ திடலில் தி.மு.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நாட்டு பாதுகாப்பு நிதி வசூல் கூட்டத்தில், அப்போது கட்சியின் பொருளாளராக திகழ்ந்த கருணாநிதி சில மணி நேரங்களில் 35 ஆயிரம் ரூபாய் நிதி திரட்டி அண்ணாவிடம் வழங்கினார். அவர் மூலம் அன்றைய முதல்-அமைச்சர் காமராசரிடம் அந்தத் தொகை வழங்கப்பட்டது.
1971-ம் ஆண்டில் போர் நிகழ்ந்தபோது, அப்போதய முதல்-அமைச்சர் கருணாநிதி, அன்றைய பிரதமர் இந்திராகாந்தியை சென்னைக்கு அழைத்து தீவுத்திடலில் நடைபெற்ற விழாவில் நாட்டு பாதுகாப்பு நிதியாக 6 கோடி ரூபாய் வழங்கியதை நினைவுகூர்கிறேன். அன்றைய சூழலில் இந்தியா முழுமைக்கும் வசூலான 25 கோடி ரூபாயில், தமிழ்நாடு வழங்கிய 6 கோடி ரூபாய் என்பது நான்கில் ஒரு பங்கு நிதியாகும்.
வங்கதேசப் போரில் கலந்து கொண்ட மாவீரர்களுக்கு மட்டுமல்ல, அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒருவர் ராணுவத்தில் இருக்கிறார் என்றால், அவர் மட்டுமல்ல, அவரது குடும்பமே ராணுவத்தில் இருப்பதாகத்தான் அர்த்தம்.
நாட்டுக்காக அர்ப்பணித்துக் கொண்ட குடும்பங்களுக்கு நாம் முதலில் மரியாதை செலுத்தியாக வேண்டும். இத்தகைய போர் வீரர்களோடு சேர்ந்து நிற்பதில் பெருமை அடைகிறேன். இப்போரில் உயிர்நீத்த வீரர்களின் துணைவியர்களுக்கும் எனது வீரவணக்கங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
இவ்விழாவில், இந்தியாவின் 4 திசைகளிலும் பயணித்த வெற்றி தீபத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தென் மண்டல ராணுவத் தளபதி வழங்கினார். விழா மேடையில் வைக்கப்பட்ட அந்த வெற்றி தீபத்திற்கு அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர்.
இந்தியா, பாகிஸ்தான் போரில் வான்வெளி தாக்குதலை தடுத்து வணிகக் கப்பல்களை சிதறடித்து வெடிக்கச் செய்து 93 ஆயிரம் எதிரி படைவீரர்கள் சரணடையக் காரணமாக இருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ரியர் அட்மிரல் எஸ்.ராம்சாகரையும், தன் சுய பாதுகாப்பைக் கருத்தில் கொள்ளாமல் படைக் குழுவினருடன் பதுங்குக் குழியின் வழியாக முன்னேறி எதிரிப் படையில் பலத்த சேதத்தை ஏற்படுத்தி, படைகள் சரணடைய காரணமாக இருந்த கர்னல் ஏ.கிருஷ்ணசாமியையும், இப்போரில் பங்கேற்று உயிர்த்தியாகம் செய்த 3 வீரர்களின் குடும்பத்தினரையும், போரில் பங்கேற்ற 6 போர் வீரர்களையும் பாராட்டி, நினைவுப்பரிசாக இந்தியா-பாகிஸ்தான் போரின் நினைவு முத்திரைப் பொறிக்கப்பட்ட தஞ்சாவூர் தட்டை முதல்-அமைச்சர் வழங்கி கவுரவித்தார்.
இவ்விழாவில், தென் மண்டல ராணுவத் தளபதி ஏ.அருண், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, பொது மற்றும் மறுவாழ்வுத் துறை செயலாளர் டி.ஜகநாதன், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் ராணுவ உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.