

திருநெல்வேலி,
திருநெல்வேலி மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான சுகுமார் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:
தேர்தல் நாளில் அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ளும் அலுவலர்களுக்கு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி தபால் வாக்கு செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் தெற்கு ரெயில்வே, அகில இந்திய வானொலி, கடல்சார் துறை, இந்திய விமான நிலைய ஆணையம், செய்தி மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், ஊடகவியலாளர்கள், சென்னை மெட்ரோ ரெயில் ஆணையம், தமிழ்நாடு போக்குவரத்து துறை, தமிழ்நாடு மின்பகிர்மான கழகம், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, சிறைத் துறை, போக்குவரத்து காவல்துறை அலுவலர்கள் வாக்குபதிவு நடைபெறும் நாளன்று அத்தியாவசிய பணிகளில், பணியில் இருக்கும் பணியாளர்கள் தபால் வாக்கு மூலம் வாக்களிப்பதற்கு சம்பந்தப்பட்ட தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் படிவம் 12-டி விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு நாளை 3 (வெள்ளிக்கிழமை) கடைசி நாள் ஆகும்.
இதற்கு அவர்களது துறை சார்ந்த தபால் வாக்கு ஒருங்கிணைப்பாளரிடம் படிவம் 12-டி-ல் இணைக்கப்பட்டுள்ள பாகம் II-ல் சான்று பெற்று இணைக்க வேண்டும். பின்னர் ஏப்ரல் 23-ம் தேதிக்கு முன்பு தொடர்புடைய தேர்தல் நடத்தம் அலுவலர் குறிப்பிடும் தேதியில், தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தபால் வாக்குகளை செலுத்தும் மையத்தில் அவர்களது தபால் வாக்குகளை செலுத்தலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.