தண்டவாளம் பராமரிப்பு பணி: கோவை-நாகர்கோவில் ரெயில் சேவையில் மாற்றம்

திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் தண்டவாளம் புதுப்பித்தல் பணிகள் நடைபெற்று வருகிறது.
சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரி மரியா மைக்கேல் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் தண்டவாளம் புதுப்பித்தல் பணிகள் நடைபெற்று வருகிறது. அதனை எளிதாக்கும் வகையில் நாளை (சனிக்கிழமை) குறிப்பிட்ட ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நாகர்கோவில்-கோவை (வண்டி எண்: 16321) எக்ஸ்பிரஸ் நாளை நாகர்கோவிலில் இருந்து காலை 8 மணிக்கு புறப்பட்டு விருதுநகர்-கரூர் இடையே மானாமதுரை, காரைக்குடி மற்றும் திருச்சி வழியாக இயக்கப்படும். இதனால் அந்த ரெயில் திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, சோழவந்தான், கொடைக்கானல் சாலை, அம்பாத்துறை, திண்டுக்கல், எரியோடு மற்றும் பாளையம் ஆகிய ரெயில் நிலையங்களில் நிற்காது.
எனவே அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி ஆகிய ரெயில் நிலையங்களில் மாற்று நிறுத்தத்தை கொண்டிருக்கும். கோவை-நாகர்கோவில் (16322) எக்ஸ்பிரஸ் நாளை கோவையில் இருந்து காலை 8 மணிக்கு புறப்பட்டு கரூர்-விருதுநகர் இடையே திருச்சி, காரைக்குடி மற்றும் மானாமதுரை வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.
இதனால் பாளையம், எரியோடு, திண்டுக்கல், அம்பாத்துறை, கொடைக்கானல் ரோடு, சோழவந்தான், மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம் ஆகிய ரெயில் நிலையங்களில் நிற்காது. எனவே திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை ஆகிய ரெயில் நிலையங்களில் மாற்று நிறுத்தத்தை கொண்டிருக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






