தண்ணீர் வாளியில் விழுந்து.. 1 வயது குழந்தை பலியான சோகம்

தண்ணீர் வாளியில் தவறி விழுந்து 1 வயது குழந்தை பரிதாபமாக இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
தண்ணீர் வாளியில் விழுந்து.. 1 வயது குழந்தை பலியான சோகம்
Published on

சென்னை வானகரம், பாப்பம்மாள் ரெட்டி தெருவைச் சேர்ந்தவர் அசோத்தமன் (வயது 36). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சவுமியா (30). இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். ஒரு வயதில் தீக்சா என்ற பெண் குழந்தையும் இருந்தது. மூத்த மகளுக்கு உடல்நிலை சரியில்லாததால் எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டுக்கு அழைத்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று மாலை சவுமியா மூத்த மகளுக்கு மருந்து கொடுத்து கொண்டிருந்தார். இரண்டாவது குழந்தை தீக்சா, வீட்டில் விளையாடிக்கொண்டு இருந்தாள்.

சிறிது நேரம் கழித்து வீட்டுக்குள் விளையாடிக்கொண்டு இருந்த குழந்தையை காணாமல் அதிர்ச்சி அடைந்த சவுமியா, வீடு முழுவதும் தேடினார்.

அப்போது வீட்டின் குளியல் அறையில் உள்ள தண்ணீர் வாளியில் தீக்சா தலைக்குப்புற நீரில் மூழ்கிய நிலையில் கிடப்பதை கண்டு கதறினார். உடனடியாக குழந்தையை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், குழந்தை தீக்சா ஏற்கனவே தண்ணீரில் மூழ்கியதால் மூச்சுத்திணறி இறந்து விட்டதாக தெரிவித்தனர். குழந்தையின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. இதுபற்றி வானகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com