ரூ.4 கோடி மதிப்புள்ள இடத்தை அரசு பள்ளிக்கு தானமளித்தவருக்கு கவுரவம்: அமைச்சர் அன்பில் மகேஷ்

அரசுப் பள்ளிக்கு ரூ.4 கோடி மதிப்பிலான இடத்தை தானமாக வழங்கிய பெண்ணை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி பாராட்டியுள்ளார்.
ரூ.4 கோடி மதிப்புள்ள இடத்தை அரசு பள்ளிக்கு தானமளித்தவருக்கு கவுரவம்: அமைச்சர் அன்பில் மகேஷ்
Published on

சென்னை,

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கொடிக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ஆயி என்ற பூரணம்மாள். இவர் கனரா வங்கியில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். பூரணம்மாளின் மகள் ஜனனி, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அவருடைய நினைவாக கொடிகுளத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியை தரம் உயர்த்துவதற்கு தானமாக பூரணம்மாள் நிலம் வழங்கினார்.

ரூ.4 கோடி மதிப்பிலான 1.5 ஏக்கர் நிலத்தை அரசு பள்ளிக்கு தானமாக வழங்கிய அவரின் செயல் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. அந்த வகையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும், பூரணம்மாளை பாராட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

"1.5 ஏக்கர் நிலத்தை அரசு பள்ளிக்கு வழங்கிய "ஆயி என்ற பூரணம்மாளை வணங்குகிறேன்! போற்றுகிறேன்!. மதுரை ஒத்தக்கடை கொடிக்குளம் நடுநிலைப்பள்ளியின் ஆசிரியப் பெருமக்கள் சார்பாகவும், அப்பள்ளியில் படிக்கும் வருங்கால அறிஞர்கள் சார்பாகவும், பூரணம்மாளுக்கு நன்றிகளை தெரிவித்து, அவரின் மகள் மறைந்த ஜனனியின் சேவை மனப்பான்மையைப் போற்றுகிறேன். "அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல் ஆலயம் பதினாயிரம் நாட்டல் அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்" எனும் பாரதியின் வரிகளுக்கு ஏற்ப வாழும் பூரணம்மாளின் தொண்டு மகத்தானது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, வருகிற 29-ந் தேதி மதுரையில் நடைபெறவிருக்கும் பெற்றோர் ஆசிரியர் கழக மண்டல மாநாட்டில் பூரணம்மாள் கவுரவிக்கப்பட உள்ளார்."

இவ்வாறு அதில் அவர் பதிவிட்டுள்ளார்.

மேலும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பூரணம்மாளை செல்போனில் தொடர்பு கொண்டு பேசி நன்றியும் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com