பக்தர்களின் வழிபாட்டு நம்பிக்கை உணர்வுகளைப் புண்படுத்திய தவெக அரசு! - வானதி சீனிவாசன் கண்டனம்

17 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் இன்று குடமுழுக்கு விழா நடைபெற்றது.
வானதி சீனிவாசன்
Published on

சென்னை,

காவல்துறையினர் புனித நீர் எனக் கூறி பிளாஸ்டிக் டப்பாவில் அடைக்கப்பட்ட நீரை வாளி நீரில் கலந்து தெளித்ததாகக் கூறப்படும் சம்பவத்திற்கு வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முன்னாள் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

குடமுழுக்கு விழா

17 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் இன்று நடைபெற்ற குடமுழுக்கு விழா, உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களால் மிகுந்த எதிர்பார்ப்புடன் எதிர்நோக்கப்பட்ட புனித நிகழ்வாகும். ஆனால், இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க குடமுழுக்கு விழாவில், பக்தர்களின் உணர்வுகளையும் ஆன்மிக நம்பிக்கைகளையும் மதிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டனவா என்ற கேள்வி எழுகிறது.

பக்தர்களை முறையாக வழிநடத்தாமல், நீண்ட நேரம் கால் கடுக்கக் காத்திருக்கச் செய்து, கூட்ட நெரிசலுக்கும் மன உளைச்சலுக்கும் உள்ளாக்கியதாக பக்தர்கள் தரப்பில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது முற்றிலும் அரைகுறையான ஏற்பாடுகளையே காட்டுகிறது.

அலட்சிய ஏற்பாடுகளும், அவமதிப்புமே பரிசு

மேலும் தங்கள் மீது புனித நீரின் ஒரு துளியாவது விழுந்தால் புண்ணியம் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்த பக்தர்களுக்கு, காவல்துறையினர் புனித நீர் எனக் கூறி பிளாஸ்டிக் டப்பாவில் அடைக்கப்பட்ட நீரை வாளி நீரில் கலந்து தெளித்ததாகக் கூறப்படும் சம்பவம் கண்டனத்திற்குரியதாகும்.

17 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இத்தகைய புனித நிகழ்வில், ஒவ்வொரு ஏற்பாடும் பக்தர்களின் நம்பிக்கையை மனதில் கொண்டு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இதை முற்றிலும் தவற விட்டிருக்கிறது தவெக அரசு. மீனாட்சி சுந்தரேஸ்வரரின் அருளைப் பெற வந்த பக்தர்களுக்கு தவெக அரசின் அலட்சிய ஏற்பாடுகளும், அவமதிப்புமே பரிசாகக் கிடைத்திருக்கிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com