ஆணவத்திலும், அடக்குமுறையிலும் திமுகவையே மிஞ்சிய தவெக! - நயினார் நாகேந்திரன்

ஊடகச் சுதந்திரம் முடக்கப்படுவது தமிழகத்திற்கு பேராபத்தானது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
நயினார் நாகேந்திரன்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

ஜோசப் விஜய்யின் தலைமையிலான “ரீல்ஸ் மாடல்” அரசுக்கு எதிரான செய்திகளை, உண்மைக் கள நிலவரங்களை மக்களிடையே கொண்டு சேர்த்தமைக்காக, 3 செய்தி சேனல்கள் தமிழக அரசு கேபிள் ஒளிபரப்பிலிருந்து நீக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள் கடும் அதிர்ச்சியளிக்கின்றன.

விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாத தவெக அரசின் இந்த அப்பட்டமான அடக்குமுறை கடும் கண்டனத்திற்குரியது. பல நூறாண்டு காலம் நாம் போராடி பெற்ற கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது. தாங்கள் நினைப்பது மட்டுமே செய்திகளாக ஒலிக்க வேண்டும், தங்களுக்கு பிடித்தவைகள் மட்டுமே காட்சிகளாகப் பதிய வேண்டும் என்ற நோக்கத்தில், தங்களுக்கு எதிராக பேசும் சமூக ஊடகவியலாளர்கள் முதல் செய்தி சேனல்கள் வரை அனைவரையும் முடக்க நினைக்கும் தவெக, மற்றொரு “தீயசக்தி”யாக மெல்ல மெல்ல வலுப்பெற்றுக் கொண்டிருக்கிறது.

காரணம், முந்தைய திமுக ஆட்சியிலும் பத்திரிக்கைகளின் குரல்வளை நெறிக்கப்பட்டது. “இம் என்றால் வனவாசம், ஆம் என்றால் சிறைவாசம்” என்ற நிலை தான் இருந்தது. ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்பதற்கேற்ப தற்போதைய தவெக ஆட்சியிலும் ஊடகச் சுதந்திரம் முடக்கப்படுவது தமிழகத்திற்கு பேராபத்தானது.

எனவே, தமிழக மக்கள் ஒழித்துக் கட்ட நினைத்த திமுகவிடம் டிரெய்னிங் எடுத்துக் கொண்ட ஆதவ் அர்ஜுனாவை இனியும் நிழல் முதல்வராகத் தொடர அனுமதித்தால், தமிழக மக்களின் பெருங்கோபத்தை முதல்வர் விஜய் சந்திக்க நேரிடும் என்பதை எச்சரிக்கையாகவே தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com