பணியை தொடர இயலவில்லை" - போலீஸ் இன்ஸ்பெக்டர் கடிதம்

தன் பணியில் தலையீடு இருப்பதால், வேலையை ராஜினாமா செய்வதாக, போலீஸ் இன்ஸ்பெக்டர் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
பணியை தொடர இயலவில்லை" - போலீஸ் இன்ஸ்பெக்டர் கடிதம்
Published on

தன் பணியில் தலையீடு இருப்பதால், வேலையை ராஜினாமா செய்வதாக, போலீஸ் இன்ஸ்பெக்டர் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை உட்கோட்டம், ஆர்.எஸ். மங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் சரவணன். 16 ஆண்டுகளாக காவல்துறையில் பணியாற்றி வரும் அவர் தமது அதிகாரத்தில் முகாம் அலுவலக எழுத்தர் (ரைட்டர்) தலையிடுவதாக கூறி உள்துறை செயலாளருக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். தொடரும் இதுபோன்ற நடவடிக்கைகள் எதிரொலியாக பணியில் இருந்து ராஜினாமா செய்வதாகவும் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது;

திருவாடானை உட்கோட்ட முகாம் அலுவலக எழுத்தர் தொடர்ந்து என்னிடம் கேட்காமல் ஆர்.எஸ். மங்கலம் காவல்நிலையத்தில் பணிபுரியும் காவலர்களுக்கு தன்னிச்சையாக தொடர்ந்து அலுவல்களை நியமித்து தமது அதிகாரத்தில் தலையிட்டு வருகிறார். இதுதொடர்பாக ஏற்கனவே அறிக்கை ஒன்றை அனுப்பி இருக்கிறேன். தற்போது காவல்நிலைய சரகத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் பொது அமைதியை நிலைநாட்ட மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் எனது வாகன டிரைவரை வேறு பணிக்கு வருமாறு ஆயுதப்படையில் இருந்து தன்னிச்சையாக எனது கவனத்துக்கு தெரிவிக்காமல் நேரடியாக காவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுபோன்ற செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் எனது காவல் பணியை திறம்பட செயல்பட முடியவில்லை. தற்போது உத்திரகோச மங்கை ஆருத்ரா தரிசனத்துக்கு ஆர்.எஸ். மங்கலம் காவல் நிலையத்தில் இருந்து இன்ஸ்பெக்டர், 14 காவலர்களை என்னிடம் எவ்வித அறிவிப்பும் இன்றி தன்னிச்சையாக பணி நியமித்துள்ளனர். தனது காவல் நிலையத்தில் ஒப்பளிக்கப்பட்ட அதிகாரிகள், காவலர்களில் 10 பேர் தமது அனுமதி இல்லாமல் அயல்பணியாக பணிபுரிந்து வருகின்றனர். காவல் நிலையத்தில் மொத்தம் 328 புலன் விசாரணை வழக்குகள், 162 குற்ற இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் மற்றும் 247 வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. புலன்விசாரணை நிலையில் உள்ள 328 வழக்கு விவரங்களை குற்றப்பதிவு பணியக தரவுகளை சேமிக்கும் பணிக்கு சிறப்பு சார்பு இன்ஸ்பெக்டர் ஒருவர் மட்டுமே உள்ளார். அவரும் உடல்நிலை பாதிப்பால் அவதிப்படுவதால் சரியாக பணி செய்ய முடிவது இல்லை. இதனால் வழக்குகளில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய முடியாமல் வழக்குகளின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே செல்கிறது.

எனவே , எனது காவல்நிலையத்தில் பணியாற்றும் அதிகாரிகள், காவலர்களுக்கு பொறுப்பு அதிகாரியான என்னை கேட்காமல் திருவாடானை உட்கோட்ட முகாம் அலுவலகத்தில் இருந்து மாவட்ட தனிப்பிரிவு அலுவலக உத்தரவின் பேரில் தன்னிச்சையாக பணி நியமித்து நிர்வாகத்தில் தலையிட்டு சீர்குலைவை ஏற்படுத்துவதால் காவல் ஆய்வாளராக பணியாற்ற விருப்பம் இல்லை. சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்களில் தொடர்ந்து பணிபுரிய விருப்பம் இல்லை. இவ்வாறு இன்ஸ்பெக்டர் சரவணன் உள்துறை செயலாளருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com