`ஐயா.. ராசா.. செல்லங்களா'.. தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்த விஜய்

ஆட்சிக்கு வர வேண்டும் என்று நாம் நினைப்பது மக்களின் நலனுக்காக மட்டுமே என்று விஜய் தெரிவித்தார்.
`ஐயா.. ராசா.. செல்லங்களா'.. தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்த விஜய்
Published on

கோவை,

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி, அடுத்த ஆண்டு (2026) நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான முன்னேற்பாடு பணிகளை செய்து வருகிறார். இதற்காக அவர் கட்சியின் வாக்குச்சாவடி முகவர்களுக்கான கருத்தரங்கை நடத்த உள்ளார்.

அதன்படி கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம் ஆகிய 7 மாவட்டங்களை சேர்ந்த த.வெ.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கான கருத்தரங்கு கோவை அருகே குரும்பபாளையத் தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

இந்நிலையில் தமிழக வெற்றி கழகம் கட்சியின் வாக்குச்சாவடி முகவர்களுக்கான கருத்தரங்கு கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று உள்ளார். இதற்காக இன்று காலையிலேயே தனி விமானம் மூலம் கோவை விமான நிலையம் வந்த விஜய்க்கு அக்கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதையடுத்து அவிநாசி சாலையில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கியிருந்தார் விஜய். இன்று மாலை 3 மணி அளவில் கருத்தரங்கில் பங்கேற்பதற்காக தமிழக வெற்றி கழகம் கட்சியின் தலைவர் விஜய் சரவணம்பட்டிக்கு காரில் புறப்பட்டார் .அப்போது அவரது காரை பின் தொடர்ந்தவாறு நூற்றுக்கணக்கான தொண்டர்கள் இரு சக்கர வாகனத்திலும் கார்களிலும் சென்றனர்.

தொடர்ந்து தவெக நிர்வாகிகள் விஜய்க்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். வாக்குச்சாவடி முகவர்களை பார்த்து கையசைத்தார் விஜய். பின்னர் தவெக மாவட்டச் செயலாளர்களுக்கு 'வாக்குச்சாவடி வியூகம்' என்ற கையேட்டை விஜய் வழங்கினார். இதனைத் தொடர்ந்து இந்த கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வர யாரையும் விடமாட்டோம் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "ஆட்சிக்கு வர வேண்டும் என்று நாம் நினைப்பது மக்களின் நலனுக்காக மட்டுமே; இனிமேல் மக்களை ஏமாற்றி யாரும் ஆட்சிக்கு வர முடியாது. நீங்கள் ஒவ்வொருவரும் போர் வீரருக்கு சமம். நாம் எப்படிப்பட்ட ஆட்சி அமைப்போம் என்பதை மக்களிடம் சொல்லுங்கள். நம்மிடம் என்ன இல்லை? மனதில் நேர்மை, கரை படியாத அரசியல் கைகள், உழைக்க உடம்பில் தெம்பு உள்ளது.. களம் ரெடியாக உள்ளது, போய் கலக்குங்கள்" என்று கூறினார்.

பின்னர் தவெக முகவர்களுக்கான கருத்தரங்கு கூட்டத்தின் முடிவில் தொண்டர்களுக்கு விஜய் நன்றி தெரிவித்தார். அப்போது பேசிய அவர், ""ஐயா, ராசா செல்லங்களா... கடைசி வரைக்கும் கூட்டத்தில் இருப்பீங்களா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால், வேற லெவல் நீங்க... கடைசி வரைக்கும் கூட்டத்தில் இருந்ததற்கு ரொம்ப...ரொம்ப நன்றி..Thank you மீண்டும் நாளை இன்னொரு பூத்கமிட்டி கருத்தரங்கில் சந்திப்போம்" என்று கூறி அங்கிருந்து விடைபெற்றார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com