குடிநீர் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை

கும்மிடிப்பூண்டி அருகே குடிநீர் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடிநீர் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
Published on

குடிநீர் பிரச்சினை

கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தை சேர்ந்தது மேலக்கழனி ஊராட்சி. இங்கு உள்ள 9 வார்டுகளில் மொத்தம் 2,500 பேர் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் குடிநீர் பிரச்சினை இருந்து வரும் நிலையில், கடந்த 3 வருடங்களாக வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் தேவையான ஆழ்துளை கிணறுகளை அமைத்து தரவில்லை என புகார் கூறப்படுகிறது.

முற்றுகை

இந்த நிலையில், மேலக்கழனி ஊராட்சியில் புதிதாக ஆழ்துளை கிணறுகள் அமைத்து குடிநீர் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தி அந்த கிராமத்தை சேர்ந்த பெண்கள் உள்பட 150 பேர் ஊராட்சி மன்ற தலைவர் பத்மஜா கவுரிசங்கர் தலைமை கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வாசுதேவன், ரவி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதி அளித்தனர். இதனையடுத்து கிராம மக்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com