பரங்கிப்பேட்டை நகரச் செயலாளர் மீதான வன்முறை: காவல்துறைக்கு ராமதாஸ் தரப்பு கண்டனம்

ஜனநாயக ரீதியாகச் செயல்படும் ஒரு அரசியல் நிர்வாகி மீது, வன்முறையை ஏவிவிடுவது என்பது நாகரிகமான அரசியலுக்கு அழகல்ல.
பரங்கிப்பேட்டை நகரச் செயலாளர் மீதான வன்முறை:  காவல்துறைக்கு ராமதாஸ் தரப்பு கண்டனம்
Published on

சென்னை,

பாமக செயல் தலைவர் ஸ்ரீகாந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

பாட்டாளி மக்கள் கட்சியின் மீதும், அதன் கொள்கை வழிமுறைகள் மீதும் மிகுந்த பற்று கொண்டவர் பரங்கிப்பேட்டை நகரச் செயலாளர் கவியரசு. மருத்துவர் அய்யாவின் வழிகாட்டுதலில் மக்கள் பணியாற்றி வரும் அவர் மீது, நேற்று (23.04.2026) நடத்தப்பட்ட திட்டமிட்ட கொடூரத் தாக்குதல் மிகுந்த மனவேதனையையும், பெரும் அதிர்ச்சியையும் அளிக்கிறது.

ஜனநாயக ரீதியாகச் செயல்படும் ஒரு அரசியல் நிர்வாகி மீது, வன்முறையை ஏவிவிடுவது என்பது நாகரிகமான அரசியலுக்கு அழகல்ல. மாற்றுக் கருத்துகளை வாதங்களால் எதிர்கொள்ள வேண்டுமே தவிர, ஆயுதங்களால் அல்ல. குற்றவாளிகள் மீது பாரபட்சமற்ற நடவடிக்கை தேவை இந்தத் தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் கீழ்க்கண்ட நபர்கள் மீது காவல்துறை உடனடியாகச் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

1. பாஸ்கர் த/பெ தங்கராசு

2. சேகர் த/பெ தங்கராசு

3. சௌந்தர் த/பெ தங்கராசு

4. பாண்டியராஜன் த/பெ சௌந்தர்ராஜன்

5. விக்னேஷ் த/பெ பாஸ்கர்

சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறையினர், இத்தகைய அராஜகச் செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்களின் அரசியல் பின்னணி பாராமல் உடனடியாகக் கைது செய்ய வேண்டும். தாமதிக்கப்படும் நீதி, அநீதிக்குச் சமம் என்பதை அரசு உணர வேண்டும். அச்சுறுத்தலுக்கு அஞ்சமாட்டோம், வன்முறை மூலம் ஒரு இயக்கத்தின் வளர்ச்சியைத் தடுத்துவிடலாம் என்று யாராவது நினைத்தால், அது அவர்களின் அறியாமையே. இத்தகைய கோழைத்தனமான தாக்குதல்கள் எங்களை அச்சுறுத்தப் போவதில்லை. மாறாக, மக்கள் பணிக்கான எங்களின் வேகத்தை இன்னும் அதிகப்படுத்தும்.

காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தம்பி கவியரசுக்கு உயர்தர மருத்துவச் சிகிச்சை வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். அவருக்குத் தேவையான அனைத்துப் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் காவல்துறை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

அமைதி காக்கும் எங்களை, அறப்போராட்டக் களத்திற்குத் தள்ள வேண்டாம் என அரசை எச்சரிக்கிறேன். உடனடியாகக் குற்றவாளிகளைக் கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனைப் பெற்றுத்தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com