விஜய்யை நாங்கள் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை: அமைச்சர் ரகுபதி

மத்திய அரசின் கையில் அமலாக்கத்துறை உள்ளது என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.
விஜய்யை நாங்கள் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை: அமைச்சர் ரகுபதி
Published on

புதுக்கோட்டை,

புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பா.ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் மட்டுமே கையெழுத்திடுவார்கள். மாணவ-மாணவிகள், தமிழ்ப்பற்று உள்ளவர்கள் யாரும் கையெழுத்திட மாட்டார்கள். பா.ஜனதாவோடு மற்ற கட்சியினர் இணைகிறபோதும், மற்ற கட்சியினரோடு கூட்டணி வைக்கும்போதும் ஆங்காங்கே வாய்ப்பு கிடைக்கிறதே தவிர, நிச்சயமாக தமிழ் மண்ணில் பா.ஜனதா காலூன்ற முடியாது.

மத்திய அரசின் கையில் அமலாக்கத்துறை உள்ளது. அதனால் யார் மீது வேண்டுமானாலும் ஏவி விடலாம். எந்த சோதனைகளையும் நடத்தலாம். இதற்கு தக்க பதிலை நீதிமன்றத்திலே நிரூபிக்க முடியும். டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறையின் சோதனையை பற்றி கேட்கிறீர்கள். இது மத்திய அரசின் பழி வாங்கும் செயலாக எடுத்துக்கொள்ளலாம். சிலரை குறிப்பிட்டு, அவர்களது வளர்ச்சியை தடுப்பதற்காக இதுபோன்ற சதி செயல்களில் ஈடுபடலாம். அமலாக்கத்துறை மூலம் அச்சுறுத்துவார்கள். அதற்கெல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம்.

நடிகர் விஜய்யை நாங்கள் ஒரு பொருட்டாக எடுத்துக்கொண்டது இல்லை. சிறுபான்மையின மக்களை கவருவதற்காக நடிகர் விஜய் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றதாக கூறுகிறீர்கள். சிறுபான்மையினர் மக்களை யாரும் ஏமாற்ற முடியாது. அவர்கள் யாரும் ஏமாளிகள் அல்ல. யா நீலிக்கண்ணீர் வடிக்கிறார்கள் என்று அவர்களுக்கு தெரியும். அவர்களுக்கு உண்மையான நண்பன் யார்? தோழமை உணர்வோடு இருக்கக்கூடியது யார் என்பது சிறுபான்மையின மக்களுக்கு நன்றாக தெரியும். அவர்கள் தி.மு.க.வை தவிர வேறு எந்த கட்சியையும் நம்ப தயாராக இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com