

சென்னை,
த.வெ.க. அமைப்பு ரீதியாக 128 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். தற்போது நிர்வாக வசதிக்காக மேலும் 27 மாவட்டங்களை உருவாக்கி அதற்கு செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளை த.வெ.க. தலைவரும், முதல்-அமைச்சருமான விஜய் நியமித்துள்ளார். அதன்படி, அமைச்சர் கீர்த்தனாவுக்கு விருதுநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
தமிழக வெற்றிக் கழகத்தின் விருதுநகர் மேற்கு மாவட்டத்தின் சார்பாக புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளும் அனைத்து கழக நிர்வாகிகளுக்கும் எனது அன்பு நிறைந்த மனமார்ந்த வாழ்த்துகள்
என் மீது நம்பிக்கை வைத்து, இந்தப் பொறுப்பை வழங்கி, என்னை இன்னும் அதிகமாக உழைக்கத் தூண்டும் நம் கழகத் தலைவர், முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்க்கும் கழகத்தின் வளர்ச்சிக்காக ஊக்கப்படுத்தி வழிகாட்டி வரும் நம் பொதுச்செயலாளர், ஊரக வளர்ச்சித் துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் அன்பிற்கினிய ஆனந்த்துக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சிவகாசி தொகுதியைச் சேர்ந்த என் அன்பு கழகத் தோழர்கள், நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் ஏற்றுக்கொண்டுள்ள இந்தப் பொறுப்பில் உங்கள் அன்பும், ஆதரவும், ஒற்றுமையும் எனக்கு என்றும் மிகப்பெரிய ஊக்கமாக இருக்கும்.
அண்ணன் வழங்கிய இந்த வாய்ப்பு எனக்கு ஒரு பொறுப்பு மட்டுமல்ல; இன்னும் அதிகமாக மக்களுக்காக உழைக்க வேண்டும் என்ற உத்வேகம். அந்த நம்பிக்கையை காப்பாற்றி, விருதுநகர் மேற்கு மாவட்டத்தை கழகத்தின் வலிமையான மாவட்டங்களில் ஒன்றாக உருவாக்குவோம்.
நமது தலைவர் மீது கொண்டுள்ள நம்பிக்கையோடும், கழகத்தின் கொள்கை மற்றும் இலக்குகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் உறுதியோடும், ஒவ்வொரு ஒன்றியத்திலும், ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு குடும்பத்திலும் கழகத்தின் வலிமையை கொண்டு சேர்ப்போம்.
இது தொடக்கம் மட்டுமே…இனி இன்னும் பெரிய இலக்குகளை நோக்கி! உழைப்போம்...வெற்றி நிச்சயம்!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.