விளைநிலங்களைக் கையகப்படுத்த மாட்டோம் என அரசு கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும் - அன்புமணி

விமான நிலையம் கட்டப்பட்டால் பாதிக்கப்படும் விவசாயிகள் தொழிற்சாலை அமைக்கப்பட்டால் பாதிக்கப்பட மாட்டார்களா? என்று அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
அன்புமணி ராமதாஸ்
கோப்புப்படம்
Published on

சென்னை,

சுரங்கம் உள்ளிட்ட எந்தத் திட்டத்திற்காகவும் விளைநிலங்களைக் கையகப்படுத்த மாட்டோம் என அரசு கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி நிறுவனத்தால் ஏற்படும் பாதிப்புகளுக்கு தீர்வு காணவும், மூன்றாம் நிலக்கரி சுரங்கம் உள்ளிட்ட புதிய திட்டங்களுக்கு 60 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படவிருப்பதை தடுத்து நிறுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்திய நிலையில், மத்தியில் ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள், மத்திய அரசிடம் பேசி இச்சிக்கலுக்கு தீர்வு காண வேண்டியது தானே? என்று தொழில்துறை அமைச்சர் பதிலளித்திருக்கிறார். கடலூர் மாவட்ட மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியாமல் தொழில்துறை அமைச்சர் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கதாகும்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற கனிம வளங்கள் மற்றும் தொழில்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, தொழில்துறை அமைச்சர் தெரிவித்த கருத்துகள் முழுக்க முழுக்க உழவர்களின் நலனுக்கு எதிராக அமைந்திருக்கின்றன. விவாதத்தின்போது பேசிய பாமக சட்டப்பேரவைக் குழு தலைவர் சவுமியா அன்புமணி, கடலூர் மாவட்ட மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலத்திலிருந்து நிலக்கரி வெட்டியெடுத்து ஆண்டுக்கு ரூ.1,300 கோடிக்கும் கூடுதலாக லாபம் ஈட்டும் என்.எல்.சி நிறுவனம், அம்மாவட்ட மக்களுக்கு எதிராக செயல்பட்டு வருவதை சுட்டிக்காட்டினார். ஏற்கனவே 40 ஆயிரம் ஏக்கர் நிலங்களை கையகப்படுத்திய என்.எல்.சி நிறுவனம், புதிய திட்டங்களுக்காக மேலும் 60,000 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தத் துடிப்பதாகவும், அதை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்தி உழவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். அதிமுக உறுப்பினர் அருண்மொழித் தேவனும் இதே கோரிக்கையை அரசுக்கு முன்வைத்தார்.

அதற்கு பதிலளித்துப் பேசிய தொழில்துறை அமைச்சர், உழவர்களின் நலன்களைக் காப்பதற்கு உத்தரவாதம் அளிக்காமல், "என்.எல்.சி நிறுவனம் மத்திய அரசுக்கு சொந்தமானது; மத்திய அரசின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் அங்கு பேசி தீர்வு கண்டால் நன்றாக இருக்கும்" என்று கூறியிருக்கிறார். என்.எல்.சிக்கு எதிரான பாட்டாளி மக்கள் கட்சியின் போராட்ட வரலாறு தெரியாததால்தான் அவர் இவ்வாறு பேசியிருக்கிறார்.

1950-ம் ஆண்டுகளில் கடலூர் மாவட்டத்தில் தொடங்கப்பட்ட என்.எல்.சி நிறுவனம், 1980-களில் விளைநிலங்களை அளவுக்கு அதிகமாக கையகப்படுத்தியது மட்டுமின்றி, அவற்றுக்கு உரிய விலை வழங்காமலும், நிலம் கொடுத்தவர்களின் குடும்பத்தினருக்கு வேலை வழங்காமலும் துரோகம் செய்து வந்தது. அதற்கு எதிராக கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக பாட்டாளி மக்கள் கட்சி நூற்றுக்கணக்கான போராட்டங்களை நடத்திதான் கடலூர் மாவட்ட மக்களுக்கு நீதி பெற்றுக் கொடுத்திருக்கிறது. என்.எல்.சிக்கு எதிரான பாட்டாளி மக்கள் கட்சியின் போராட்டங்கள் தொடங்கிய காலத்தில் இன்றைய தொழில்துறை அமைச்சர் பிறந்திருக்கக் கூட மாட்டார். அதனால்தான், போராட்ட வரலாறு தெரியாமல் அறியாமையில் இவ்வாறு பேசியிருக்கிறார்.

என்.எல்.சி மத்திய அரசு நிறுவனமா? மத்தியில் ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கிறோமா? என்பது குறித்த எந்தக் கவலையும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு இருந்ததில்லை. கடலூர் மாவட்ட மக்களுக்கு என்.எல்.சி நிறுவனத்தால் சுரண்டலும், அநீதியும் இழைக்கப்படும் போதெல்லாம் அதற்கு எதிராக பாமக போராடி வெற்றி பெற்றுள்ளது. என்.எல்.சி விவகாரத்தில் கடலூர் மாவட்ட மக்களுக்கு கொஞ்சமாவது நீதி கிடைத்திருக்கிறது என்றால், அதற்கான முழு முதல் காரணம் பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய சமரசமற்ற போராட்டங்கள்தான்.

கடந்த திமுக ஆட்சியில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இரு அமைச்சர்களும் என்.எல்.சி நிறுவனத்தின் தரகர்களாக செயல்பட்டு, காவல்துறை உதவியுடன் மக்கள் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்டு, நிலங்களைப் பறித்து என்.எல்.சிக்கு தாரை வார்த்தனர். வயலில் ராட்சத எந்திரங்களை இறக்கி கதிர் விடும் நிலையில் இருந்த பயிர்களை அழித்தனர். அத்தகைய அநீதிகளுக்கு எதிராக தீவிரமாக போராடியது பாட்டாளி மக்கள் கட்சிதான். அதன் பயனாகத் தான் சேத்தியாத்தோப்புக்கு கிழக்கே நிலக்கரித் திட்டம், மைக்கேல்பட்டி நிலக்கரித் திட்டம், வடசேரி நிலக்கரித் திட்டம் ஆகியவற்றை மத்திய அரசு ஏலப்பட்டியலில் இருந்து நீக்கியது. காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் வருவதால் வீராணம் நிலக்கரித் திட்டம், பாளையம்கோட்டை நிலக்கரித் திட்டம் ஆகியவற்றுக்கு அனுமதி தரப்போவதில்லை என்று முந்தைய திமுக அரசு அறிவித்தது.

நெய்வேலி மூன்றாவது சுரங்கத்திற்காக கையகப்படுத்தப்படவுள்ள நிலங்களும் காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் வருவதால், அதையும் தடுத்து நிறுத்த வேண்டும் என்பது தான் பாமக மற்றும் கடலூர் மாவட்ட மக்களின் நிலைப்பாடு ஆகும். இதை செய்ய வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கே உள்ளது. என்.எல்.சி நிறுவனத்தின் 5% பங்குகள் தமிழக அரசிடம் தான் உள்ளன. தமிழக அரசின் எரிசக்தித் துறை செயலாளர்தான் என்.எல்.சியின் இயக்குனர்களில் ஒருவராக உள்ளார். இவை அனைத்துக்கும் மேலாக என்.எல்.சி நிறுவனத்திற்கு நிலம் கையகப்படுத்தி தரும் சமூக அநீதி வேலையை செய்வதே தமிழக அரசுதான்.

அதனால், தமிழக அரசு மறுத்தாலோ, விளைநிலங்களை கையகப்படுத்த மாட்டோம் என்று கொள்கை முடிவு எடுத்து அறிவித்தாலோ, அதற்கு எதிராக என்.எல்.சி நிறுவனத்தால் எதுவும் செய்ய முடியாது. இதை செய்வோம் என்று சொல்வதற்கு பதிலாக மத்திய அரசிடம் கூட்டணி கட்சிகள் பேச வேண்டும் என்று தொழில்துறை அமைச்சர் கூறுகிறார் என்றால், இந்த தவெக அரசுக்கும், முந்தைய திமுக அரசுக்கும் என்ன தான் வித்தியாசம்?

அதே விவாதத்தில் பேசிய பாட்டாளி மக்கள் கட்சி உறுப்பினர் கணேஷ் குமார், பரந்தூர் விமான நிலையத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை வேறு திட்டங்களுக்காக பயன்படுத்த முடியாது என்பதால் அந்த நிலங்களை உழவர்களிடம் அரசு ஒப்படைக்குமா? என்று கேட்டபோது, 2013-ம் ஆண்டு நிலம் எடுப்பு சட்டத்தின்படி விமான நிலையத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை வேறு திட்டங்களுக்கு பயன்படுத்தலாம் என்று கூறினார். அதுமட்டுமின்றி, பரந்தூர் விமான நிலையத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் தொழில் திட்டங்களை செயல்படுத்தப் போவதாகவும் கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

ஒரு திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை இன்னொரு திட்டத்திற்கு பயன்படுத்தலாம் என்று 2013-ம் ஆண்டு சட்டத்தில் கூறப்பட்டிருந்தாலும் கூட, ஒரு திட்டம் கைவிடப்பட்டால், அந்தத் திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை அவற்றின் பழைய உரிமையாளர்களிடம் வழங்க வேண்டும் என்று 2016-ம் ஆண்டில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது. அதன்படி தான் மேற்குவங்க மாநிலம் சிங்கூர், நந்திகிராமம் ஆகிய இடங்களில் கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் மக்களிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டன. அதற்கு மாறாக பரந்தூர் விமான நிலையத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் சிப்காட் உள்ளிட்ட தொழில்திட்டங்களைச் செயல்படுத்த தவெக அரசு முயன்றால் அதற்கு எதிராக மக்களைத் திரட்டி நானே தலைமையேற்று போராடுவேன்.

விவசாயிகளை பாதிக்கும் எந்தத் திட்டத்தையும் செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று முதல்-அமைச்சர் விஜய் கூறுகிறார். செய்யாறு சிப்காட் விரிவாக்கத்திற்காக மேல்மா பகுதியில் நிலம் எடுக்க அனுமதிக்க மாட்டோம் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறுகிறார். இவை வரவேற்கப்பட வேண்டிய நிலைப்பாடுகள். ஆனால், முதல்-அமைச்சரின் நிலைப்பாட்டுக்கு எதிராக பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் தொழிற்சாலைகளை அமைப்போம், என்.எல்.சிக்காக நிலம் கையகப்படுத்தப்படும் விவகாரத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழில்துறை அமைச்சர் கூறுவதை ஏற்றுக் கொள்ளவே முடியாது. விமான நிலையம் கட்டப்பட்டால் பாதிக்கப்படும் விவசாயிகள் தொழிற்சாலை அமைக்கப்பட்டால் பாதிக்கப்பட மாட்டார்களா?

தொழில் வளர்ச்சியை விட விவசாயிகளின் நலன் தான் முக்கியம் என்று கூறும் தவெக அரசு, அந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தால், என்.எல்.சி பழுப்பு நிலக்கரி சுரங்கமாக இருந்தாலும், டங்ஸ்டன் சுரங்கமாக இருந்தாலும், சிப்காட் தொழில்பூங்காவாக இருந்தாலும் அவற்றுக்கு ஒரே ஒரு சென்ட் வேளாண் நிலத்தைக் கூட கையகப்படுத்தித் தர மாட்டோம் என்பதை கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும். அதைச் செய்ய தவெக அரசு தயாரா? என்பதை ஆட்சியாளர்கள் தெளிவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com