

சென்னை,
தமிழகத்தில் மழைக்கு பின்னர் ஏற்படும் தொற்று நோய்கள் மற்றும் வைரஸ் நோய்களை தடுக்கவும், கொசு ஒழிப்பு நடவடிக்கைகள், துப்புரவுப் பணிகள், மருத்துவ வசதிகள் ஆகியவற்றை விரிவாக மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அறிவுரை வழங்கியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
பருவமழைக்கு முன்பாகவும், மழைப் பொழிவின்போதும், மழைக்குப் பிறகும் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்பது குறித்து ஏற்கனவே மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு உள்ளன.
காய்ச்சல் பாதிப்பு
அதன் முக்கிய அம்சங்கள் மற்றும் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து முதல்-அமைச்சர் மற்றும் தலைமைச் செயலாளர் தலைமையில் தனித்தனியே நடைபெற்ற ஆய்வுக் கூட்டங்களில் வலியுறுத்தப்பட்டது. மழை வடிந்த இடங்களில் பிளீச்சிங் பவுடர்கள் மற்றும் கிருமி நாசினிகள் தெளிப்பதும், மருத்துவ முகாம்கள் நடத்துவதும் ஒருபுறம் இருந்தாலும், அதனுடன் மக்களுக்கு வினியோகிக்கப்படும் தண்ணீரில் உரிய அளவு குளோரின் கலந்து பாதுகாப்பான நீரை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.
தண்ணீரில் ஏற்படும் மாசுபாட்டால் வயிற்றுப்போக்கு மட்டுமல்லாது கணைய அழற்சி, மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் தீவிரமாக பரவ வாய்ப்புள்ளது. எனவே, அதைக் கருத்தில் கொண்டு குடிநீரின் பாதுகாப்பை முறையாக கண்காணிக்க வேண்டும். இதைத் தவிர, கொசுக்கள் மூலம் பரவும் சிக்குன் குனியா, டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல் பாதிப்புகளும் அதிகளவில் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
தரமற்ற உணவு
மேலும் மழைக் காலங்களில் நுரையீரல் சார்ந்த நோய்களும், சேற்றுப் புண்களும் பொதுமக்களுக்கு ஏற்படக் கூடும். தரமற்ற உணவுகளால் உடல் உபாதைகள் வருவதற்கும் வாய்ப்புண்டு. அவற்றைத் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் விரிவாக மேற்கொள்ள வேண்டும்.
இது தொடர்பாக அரசு விடுத்துள்ள வழிகாட்டுதல்களை கடைப்பிடித்து கொரோனாவுக்கு நடுவில் பருவ கால நோய்களைத் தடுக்கும் பணிகளை துரிதப்படுத்துமாறு வலியுறுத்தப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.