சென்னையில் புதிய விமான நிலையம் எங்கே அமைகிறது? 2 இடங்களை தேர்வு செய்த தமிழக அரசு

செய்யூர் பகுதி தற்போதைய சென்னை விமான நிலையத்தில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது
 விமான நிலையம்
Published on

சென்னையில் தற்போதுள்ள விமான நிலையத்தின் நெரிசலை குறைக்கும் வகையில், 2-வது விமான நிலையம் அமைக்க நீண்டகாலமாக திட்டமிடப்பட்டு வருகிறது. இதற்காக காஞ்சீபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கடந்த மே மாதம் பொறுப்பேற்ற தவெக அரசு, பரந்தூர் விமான நிலைய திட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்தது. தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு விமான நிலையம் அமைப்பது அவசியம் என்பதால், புதிய இடத்தில் விமான நிலையம் அமைக்கும் பணிகளில் தமிழக அரசு ஈடுபட்டது.

சாத்தியக்கூறு ஆய்வு

இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள மானெல்லூர் ஆகிய 2 இடங்களை தமிழக அரசு தேர்வு செய்துள்ளது.. இந்த 2 இடங்களிலும் முதற்கட்ட ஆய்வுகளை தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் ஏற்கனவே மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதையடுத்து, 2 இடங்களிலும் ஆரம்பகட்ட சாத்தியக்கூறு ஆய்வு நடத்துமாறு இந்திய விமான நிலையங்கள் ஆணையத்திடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. விமான நிலையங்கள் ஆணைய அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் இறுதி இடம் தேர்வு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மானெல்லூர் பகுதி

செய்யூர் பகுதி தற்போதைய சென்னை விமான நிலையத்தில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கும்மிடிப்பூண்டி அருகேயுள்ள மானெல்லூர் பகுதி சென்னை நகரில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. எனினும், இந்த இரு இடங்களிலும் விமான நிலையம் அமைப்பதற்கு சில நடைமுறை மற்றும் பாதுகாப்பு சார்ந்த சவால்கள் இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக செய்யூர் பகுதியில் விமானப்படை வான்வெளி தொடர்பான அனுமதிகள் பெற வேண்டிய நிலை உள்ளது. இதற்கிடையே, புதிய விமான நிலையத்தை விரைவாக செயல்பாட்டுக்கு கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வந்தாலும், திட்டம் முழுமையாக நிறைவேற குறைந்தது 5 முதல் 7 ஆண்டுகள் ஆகலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com