

சென்னை,
2021-22-ம் ஆண்டுக்கான பள்ளிக்கல்வித்துறை மானியக்கோரிக்கையில் குழந்தைகளில் எழுத்து ஆர்வத்தை ஊக்குவிக்கும் வண்ணம் 18 வயதுக்குட்பட்ட இளம் எழுத்தாளர்களில் ஆண்டுதோறும் 3 சிறந்த எழுத்தாளர்களை தேர்வு செய்து ரூ.25 ஆயிரம் ரொக்கம், கேடயம் மற்றும் சான்றிதழுடன் கவிமணி விருது வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சரால் அறிவிக்கப்பட்டது.
இதனை செயல்படுத்தும் வகையில் பொது நூலக இயக்ககம் இளம் படைப்பாளர்களிடம் இருந்து தமிழில் கட்டுரைகள், சிறுகதைகளை வரவேற்கிறது. இவ்விருதுக்காக தங்களுடைய படைப்புகளை சமர்ப்பிக்க விரும்பும் இளம் படைப்பாளிகள் www.tamilnadupubliclibraries.org என்ற இணையதள முகவரியில் இருந்து சுயவிவர படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை முழுமையாக பூர்த்தி செய்து அடுத்த மாதம் (டிசம்பர்) 31-ந்தேதிக்குள் தங்களுடைய படைப்புகளுடன் பொது நூலக இயக்ககம், 737/1, அண்ணாசாலை, சென்னை-600002 என்ற முகவரிக்கு அனுப்பலாம்.
மேலும் dpltnservices@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யலாம். இதுதொடர்பான மேலும் விவரங்களுக்கு இக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் வே.தினேஷ்குமாரை 99414 33630 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவல் கல்வித்துறையின் பொது நூலக இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.