செல்போனில் 200-க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச வீடியோக்கள்: ஜெராக்ஸ் கடைக்காரர் அதிரடி கைது

நெல்லை பேட்டையில் ஜெராக்ஸ் எடுக்க வந்த இளம்பெண் ஒருவரை ரகசியமாக வீடியோ எடுத்த கடை உரிமையாளரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
ஆபாச வீடியோக்கள்
Published on

நெல்லை,

நெல்லை மாவட்டம் பேட்டை பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், அங்குள்ள மாநகராட்சி அரசு மருத்துவமனைக்கு எதிரே அமைந்துள்ள ஒரு ஜெராக்ஸ் கடைக்கு நேற்று சென்றுள்ளார். அப்போது அந்த கடையின் உரிமையாளரான முகமது அஸ்ரப் அலி என்பவர், அந்த இளம்பெண்ணுக்கு தெரியாமல் மறைமுகமாக தனது செல்போன் மூலம் அவரை வீடியோ எடுத்துள்ளார். கடைக்காரரின் இந்த அநாகரிகமான செயலினைக் கண்டு கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண், உடனடியாக தனது வீட்டிற்கு சென்று குடும்பத்தினரிடம் விபரத்தை கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து கோபமடைந்த பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அந்த ஜெராக்ஸ் கடைக்கு விரைந்து வந்து, உரிமையாளர் முகமது அஸ்ரப் அலியைப் பிடித்து விபரம் கேட்டு விசாரிக்கத் தொடங்கியுள்ளனர். இதனால் பயந்துபோன முகமது அஸ்ரப் அலி, தப்பிக்கும் நோக்கில் தனது செல்போனை அவர்களிடம் கட்டாயமாக ஒப்படைத்துவிட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பியோடி தலைமறைவானார்.

அதன் பின்னர், பாதிக்கப்பட்ட இளம்பெண் தனது குடும்பத்தினருடன் சம்பந்தப்பட்ட செல்போனை பெற்றுக்கொண்டு பேட்டை காவல் நிலையத்திற்குச் சென்று புகார் மனு அளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் தலைமையிலான போலீசார், ஒப்படைக்கப்பட்ட அந்த செல்போனை ஆய்வு செய்து தீவிர தணிக்கைக்கு உட்படுத்தினர்.

செல்போனில் 200-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள்:

அப்போது அந்த செல்போனில் 200-க்கும் மேற்பட்ட பெண்களை அவர்களுக்கு தெரியாமலேயே ஆபாசமாக வீடியோ எடுத்து சேமித்து வைத்திருந்தது போலீசாரையே பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தனது கடைக்கு ஜெராக்ஸ் எடுக்க வரும் பெண்களை இலக்காகக் கொண்டு, முகமது அஸ்ரப் அலி இந்தத் தொடர் குற்றச் செயலில் ஈடுபட்டு வந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பெண்களின் கண்ணியத்திற்கு பங்கம் விளைவித்தல், தகவல் தொழில்நுட்ப முறைகேடு உள்ளிட்ட பல்வேறு கடுமையான பிரிவுகளின் கீழ் பேட்டை போலீசார் முறைப்படி வழக்குப்பதிவு செய்தனர்.

சிறையில் அடைப்பு:

மேலும் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்திய போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ், தலைமறைவாக இருந்த குற்றவாளி முகமது அஸ்ரப் அலியை சில மணி நேரங்களிலேயே அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தார். இந்த சம்பவம் நெல்லை பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com