கல்வி நிறுவன கட்டடங்களுக்கு வரன்முறைப்படுத்தும் திட்டத்தில் அனுமதி பெற விண்ணப்பிக்கலாம்

வரன்முறைப்படுத்தும் திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இணையதளம் மூலம் பதிவு செய்யலாம் என தூத்துக்குடி கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
கல்வி நிறுவன கட்டடங்களுக்கு வரன்முறைப்படுத்தும் திட்டத்தில் அனுமதி பெற விண்ணப்பிக்கலாம்
Published on

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

திட்டமில்லா பகுதிகளில் 1.1.2011-க்கு முன்னர் கட்டப்பட்டு இயங்கிவரும் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டடங்களுக்கு, வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், இணையதளம் மூலம் விண்ணப்பிக்க மீண்டும் ஒரு வாய்ப்பாக 1.7.2025 முதல் 30.6.2026 வரை ஓராண்டு காலம் காலநீட்டிப்பு செய்து ஏற்கெனவே வெளியிடப்பட்ட அரசாணையில் குறிப்பிடப்பட்ட வழிகாட்டுதல்களில் எவ்வித மாற்றமும் இல்லாமல் அரசாணை எண். 92 வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் (ந.வ(3)) துறை, நாள் 26.6.2025-ல் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு கட்டப்பட்டுள்ள அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்கள் மலையிடப் பகுதியில் (HACA) அமையும்பட்சத்தில் அரசு கடிதம் எண் 15535/ந.வ4(3)/2019, நாள் 18.2.2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து வழிமுறைகளை பின்பற்ற தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.tcponline.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்யலாம் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. மேலும் இந்த வாய்ப்பினை தவறாது பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com