அரசியல் கட்சிகளின் விவசாய கடன் தள்ளுபடி வாக்குறுதிக்கு தடை விதிக்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல்

அரசியல் கட்சிகளின் விவசாய கடன் தள்ளுபடி வாக்குறுதிக்கு தடை விதிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Published on

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல் ரீனா என்.சிங் என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

அரசியல் கட்சிகள் மக்களின் ஓட்டுகளை கவர தங்கள் தேர்தல் அறிக்கையில் விவசாயிகளின் வங்கி கடன் தள்ளுபடி உள்ளிட்ட வாக்குறுதிகளை அளிக்கின்றனர். இவ்வாறு மக்களின் வரிப்பணத்தில் இருந்து கடன் தள்ளுபடி செய்வதன் மூலம் இந்திய பொருளாதாரம் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகிறது.

எனவே ஆளும் கட்சியோ, எதிர்க்கட்சியோ தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு விவசாய கடன் தள்ளுபடி செய்ய தடை விதிக்க வேண்டும். மேலும் மத்திய அரசு அல்லது மாநில அரசுகள் கடன் தள்ளுபடி செய்ய அனுமதி வழங்கக்கூடாது. அதற்கு பதிலாக விவசாயிகளுக்கு பயன் அளிக்கும் வகையில், அவர்கள் நலன் சார்ந்த விவசாய கொள்கைகளை வகுக்க வேண்டும். இந்த வழக்கில் மத்திய அரசு, மாநில அரசு, யூனியன் பிரதேசங்கள், தேர்தல் கமிஷன், ரிசர்வ் வங்கி, மத்திய விவசாயத்துறை மற்றும் நிதித்துறை அமைச்சகங்களையும் சேர்க்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு 22-ந்தேதி விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com