உத்தரகாண்டில் பனிப்பொழிவைக் காண சுற்றுலா பயணிகள் ஆர்வம்

உத்தரகாண்ட் மாநிலத்தில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால் பத்ரிநாத், கேதர்நாத் ஆகிய புனித தலங்களை வெண் பனி சூழ்ந்துள்ளது.
Published on

டேராடூன்,

உத்தரகாண்ட் மாநிலத்தில் மந்தாகினி ஆற்றுக்கு அருகில் கர்வால் இமயமலைத் தொடரில் புகழ்பெற்ற புனித தலமாகிய கேதர்நாத் கோவில் அமைந்துள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பக்தர்கள் இந்த தலத்திற்கு புனித பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது இந்த பகுதியில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால் அந்த பகுதி முழுவதும் வெண்போர்வை போர்த்தியது போல் காட்சியளிக்கிறது.

இது போலவே பத்ரிநாத் புனித தலம் அமைந்துள்ள சமோலி மாவட்டத்திலும் கடந்த வியாழக்கிழமை முதல் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள கிராமங்கள் முழுவதும் வெண்பனி சூழ்ந்துள்ளது.

இந்த பனிப்பொழிவு சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. பத்ரிநாத், கேதர்நாத் ஆகிய தலங்களுக்கு புனித பயணம் மேற்கொள்ளும் பக்தர்கள் செல்லும் பாதை முழுவதும் பனி மூடி உள்ளதால் பயணம் சிறிது கடினமாகியுள்ளதாக தெரிவித்தனர்.

வடக்கிலிருந்து குளிர் காற்று வீசுவதால் இந்தியாவின் வடமேற்கு மற்றும் இமயமலை அடிவார பகுதிகளில் பனிப்பொழிவு ஏற்படும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com