

வதோதரா,
குஜராத் மாநிலம் வதோதராவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக அப்பகுதியில் வெள்ளம் சூழ்ந்தது. இதையடுத்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்புக்குழுவினர் மீட்டு பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு விஸ்வாமித்திரி ரயில் நிலையம் அருகே உள்ள தேவிபுரா பகுதியின் காவல்துறை துணை ஆய்வாளர் கோவிந்த் சாவ்தா கழுத்தளவு தண்ணீரில் இறங்கி 2 வயது குழந்தையை தலையில் சுமந்து காப்பாற்றினார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, தேவிபுரா பகுதியை சுற்றி வெள்ளம் சூழ்ந்திருந்தது. கழுத்தளவு வரை வெள்ளம் இருந்ததால் நானும் எனது குழுவினரும் கயிறு கட்டி மக்களை மீட்டு வந்தோம். அப்போது ஒரு வீட்டில் ஒரு தாயும் குழந்தையும் சிக்கியிருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. நாங்கள் அங்கு சென்று பார்த்தபோது குழந்தையை கைகளில் தூக்கிக்கொண்டு வருவது சிரமமாக இருந்த்தால் ஒரு சிறிய பிலாஸ்டிக் கூடையில் சில துணிகளை வைத்தோம்.
பின்னர் குழந்தையை அந்த கூடயினுள் வைத்து அதை என் தலையில் சுமந்து கொண்டு சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் கடந்து வந்து பாதுகாப்பான இடத்தில் சேர்த்தேன். குழந்தையின் தாயும் பத்திரமாக மீட்க்கப்பட்டார் என்று அவர் கூறினார். இச்சம்பவம் சமூக வலைதலங்களில் வைரலாகி காண்போரை நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது