இந்திக்கு எதிராக வைகோ கோஷம் - மாநிலங்களவையில் பரபரப்பு

மாநிலங்களவையில் இந்திக்கு எதிராக வைகோ கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
Published on

புதுடெல்லி,

இந்திய மருத்துவ ஆணைய மசோதா விவாதம் மாநிலங்களவையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் மேற்கு வங்காளம், கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களை சேர்ந்த உறுப்பினர்கள் ஆங்கிலத்தில் பேசினார்கள். அதற்கு பதில் அளித்து மத்திய மந்திரி ஹர்ஷவர்த்தன் இந்தியில் பேச தொடங்கினார். அப்போது, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ எழுந்து, இது மருத்துவம் குறித்த விவாதம். அதில் நுணுக்கமான சொற்களை ஆங்கிலத்தில்தான் சொல்ல முடியும். எனவே, நீங்கள் ஆங்கிலத்தில் பேசுங்கள் என்றார்.

உடனே, வடமாநில உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து, இந்தியில் தான் பேச வேண்டும் என்று கூச்சல் போட்டனர். உடனே வைகோ, இந்தியில் பேசக் கூடாது. உங்களுக்கு இந்தி வேண்டுமா?, இந்தியா வேண்டுமா?. உங்களுடைய வெறிப்போக்கு இந்தியாவை உடைத்து விடும் என்றார். தொடர்ந்து உறுப்பினர்கள் கோஷம் போட்டதால், ஒழியட்டும் இந்தி ஆதிக்கம் ஒழியட்டும் என்று வைகோ கோஷமிட்டார். இதனால், அவையில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே, அவைத் தலைவர் வெங்கையா நாயுடு, மொழிப் பிரச்சினையால் இங்கே மோதல் ஏற்பட்டது. இந்திய நாட்டின் அனைத்து மொழிகளிலும் இங்கே பேசலாம். இனிமேல் திணிப்பும் இல்லை, எதிர்ப்பும் இல்லை என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com