பாகிஸ்தானில் இந்து கோவில் கட்டுவதற்கு தடை விதிக்க கோர்ட்டு மறுப்பு

பாகிஸ்தானில் இந்து கோவில் கட்டுவதற்கு தடை விதிக்க கோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் இந்து கோவில் கட்டுவதற்கு தடை விதிக்க கோர்ட்டு மறுப்பு
Published on

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள எச்9 பகுதியில் 20,000 சதுரடியில் முதல் இந்து கோவில் கட்டப்படுகிறது.

இஸ்லாமாபாத் இந்து பஞ்சாயத்து என்ற அமைப்பு சார்பில் இந்த கோவில் கட்டப்படுகிறது. இதற்காக கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்த நிலையில் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான கூட்டணி ஆட்சியில் அங்கம் வகிக்கும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் காயித் கட்சி இஸ்லாமாபாத்தில் இந்து கோவிலை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இது தொடர்பாக அக்கட்சியை சேர்ந்த ஒரு சிலர் இந்துக் கோவில் கட்டுவதற்கு தடை விதிக்கக் கோரி இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கோவில் கட்டுவதற்கான நிலத்தைத் மூலதன மேம்பாட்டு ஆணையம் ஒதுக்குவதை ரத்து செய்ய வேண்டும் எனவும், இஸ்லாமாபாத் இந்து பஞ்சாயத்து அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி இருந்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு நீதிபதி அமீர் பாருக், இந்து கோவில் கட்டுவதற்கு தடை விதிக்க முடியாது எனக் கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்தார்.

மேலும் நிலத்தை யாருக்கு எதற்காக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பதை மூலதன மேம்பாட்டு ஆணையமே முடிவு செய்யும் என்றும் அதில் கோர்ட்டு தலையிட முடியாது என்றும் நீதிபதி தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com