ஆஸ்திரேலியாவில் கடும் புழுதிப்புயல்: வானம் நிறம் மாறியது - பொது மக்களுக்கு எச்சரிக்கை

ஆஸ்திரேலியாவில் கடும் புழுதிப்புயல் காரணமாக வானம் நிறம் மாறியது. இதனால் அங்குள்ள பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
ஆஸ்திரேலியாவில் கடும் புழுதிப்புயல்: வானம் நிறம் மாறியது - பொது மக்களுக்கு எச்சரிக்கை
Published on

சிட்னி,

ஆஸ்திரேலியாவில் நாட்டின் தென் கிழக்கு பகுதி முழுமைக்கும் நேற்று கடுமையான புழுதிப்புயல் வீசியது. இதன் காரணமாக வானம் ஆரஞ்சு நிறமாக (செம்மஞ்சள் நிறமாக) மாறியது.

500 கி.மீ. பரப்புக்கு இந்தப் புழுதிப்புயல் வீசியது. சிட்னி தொடங்கி பல நகரங்கள் புழுதிப்புயலால் பாதிக்கப்பட்டன. காற்றின் தரம் மிகக்குறைவானதாக மாறியதால் பொது மக்கள் இடையே அச்சம் ஏற்பட்டது.

நியூ சவுத் வேல்ஸ் மாகாணம் உள்பட பல பகுதிகளில் சாலைகளே கண்களுக்கு தெரியவில்லை. உலர்ந்து போன மண்ணைக் கிளப்பி கடுமையான காற்று வீசியதாக அதிகாரிகள் கூறினர்.

கடந்த ஆகஸ்டு மாதம் முதல், அந்த நாடு கடுமையான வறட்சியின் பிடியில் சிக்கியுள்ள நிலையில், இந்தப் புழுதிப்புயல் வீசியதால் சாலைப் போக்குவரத்து பாதித்தது. விமானப்போக்குவரத்தும் பாதித்ததாக தகவல்கள் கூறுகின்றன.

புழுதிப்புயலால் பலரும் பாதிக்கப்பட்டனர். அவர்கள் சுவாசிப்பதில் சிரமப்பட்டனர். பலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக அதிகாரிகள், பொதுமக்களுக்கு எச்சரிக்கையுடன் கூடிய வேண்டுகோள் விடுத்தனர். யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம், குறிப்பாக குழந்தைகளை வெளியே விடாதீர்கள், சுவாச பிரச்சினை உடைய முதியவர்களையும் வெளியே அனுப்ப வேண்டாம் என அவர்கள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com