

வெல்லிங்டன்
இந்தியா உடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான மசோதா நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
நியூசிலாந்து நாட்டின் 9-வது பெரிய சரக்கு ஏற்றுமதி நாடாக இந்தியா உள்ளது. இந்த நிலையில், அந்நாட்டு நாடாளுமன்றத்தில், இந்தியாவுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான மசோதா இன்று நிறைவேறி உள்ளது. இதற்கு எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியின் ஆதரவும் கிடைத்துள்ளது. இதன்படி, 93-29 என்ற வாக்குகள் கணக்கில் மசோதா நிறைவேறியுள்ளது.
இதனால், நியூசிலாந்து நாட்டில் இருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 95 சதவீத பொருட்களுக்கு வரி விலக்குகள் அல்லது வரிகள் குறைப்பு இருக்கும். தற்போது பீங்கான், தரைவிரிப்புகள் மற்றும் வாகன உதிரிபாகங்கள் உள்ளிட்ட இந்திய பொருட்களுக்கு நியூசிலாந்து 10 சதவீதம் வரை வரி விதித்து வருகிறது.
இந்நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம் மற்றும் முதலீடுகளை ஊக்குவிக்கும் நோக்கிலான இந்த ஒப்பந்தத்தின்படி, இந்தியாவில் இருந்து நியூசிலாந்துக்கு ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் வரி விலக்கு அளிக்கப்படும்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கு இடையேயான இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கடந்த ஏப்ரல் மாதம் 27-ந்தேதி ஏற்படுத்தப்பட்டது. இந்த ஒப்பந்தம், அடுத்த மாதம் 19-ந்தேதி முதல் அமலுக்கு வரும் என்று மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் ரூ.1 லட்சத்து 91 ஆயிரத்து 855 கோடி (2 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர்) மதிப்பில் முதலீடுகளை மேற்கொள்ளவும் நியூசிலாந்து ஒப்பந்தம் செய்துள்ளது.