

ஜகார்தா,
இந்தோனேசியாவில் எரிமலை வெடித்துள்ளது. இதனால் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
ஆசியாவில் அமைந்துள்ள நாடு இந்தோனேசியா. இந்நாட்டில் ஆயிரக்கணக்கான தீவுகள் உள்ளன. மேலும், ஆயிரக்கணக்கான மலைகள் உள்ளன. இதில் 130 எரிமலைகள் செயல்பாட்டில் உள்ளன.
இந்நிலையில், அந்நாட்டின் தலைநகர் ஜகார்தாவில் இருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லம்பங் மாகாணத்தில் தெற்கு லம்பங் பகுதியில் மவுண்ட் கர்கடவ் என்ற எரிமலை உள்ளது. இந்த எரிமலை கடந்த 5ம் தேதி வெடித்து சிதறியது. எரிமலையில் இருந்து கரும்புகையுடன் லாவா வெளியேறி வருகிறது
எரிமலை வெடித்ததால் கரும்புகை அப்பகுதியை இருளாக்கியது. மேலும், கரும்புகை பல கிலோமீட்டர்களுக்கு பரவியது. இதன் காரணமாக இந்தோனேசியாவில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள சர்வதேச விமான நிலையம் உள்பட 8 விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
விமான நிலையங்கள் மூடப்பட்டதால் விமான சேவை தடைபட்டுள்ளது. இதனால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உள்பட சுமார் 3 லட்சம் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.