குவைத்தின் பாதுகாப்பு ஒப்பந்த கோரிக்கையை நிராகரித்தது பாகிஸ்தான்

குவைத்திடமிருந்து பெருமளவில் எரிசக்தி முதலீடுகளை பெற பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
pakistan
Published on

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானுடன் சவுதி அரேபியா பாணியிலான பாதுகாப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்த குவைத் அரசு திட்டமிட்டு வரும் நிலையில், அங்கு தனது நாட்டுப் படைகளை அனுப்ப பாகிஸ்தான் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்து உள்ளது.

குவைத்தின் கோரிக்கை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றத்தை அடுத்து, குவைத் நாடு தனது எல்லையை பாதுகாக்க பாகிஸ்தானுடன் கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தம் செய்ய விருப்பம் தெரிவித்தது. சவுதி அரேபியாவில் பாகிஸ்தான் ராணுவம் நிலைநிறுத்தப்பட்டு உள்ளது போல, குவைத்திலும் ஆயிரக்கணக்கான பாகிஸ்தான் வீரர்கள், போர் விமானங்கள், வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ட்ரோன்களை நிறுத்த குவைத் கோரிக்கை விடுத்தது.

பாகிஸ்தான் முடிவு

குவைத்தின் இந்த கோரிக்கையை பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் நிராகரித்து உள்ளது. தற்போதைய சூழலில் குவைத்திற்கு போர் துருப்புகளை அனுப்பும் எண்ணம் இல்லை என்று இஸ்லாமாபாத் அதிகாரிகள் திட்டவட்டமாகத் தெரிவித்து உள்ளனர்.

காரணம் என்ன?

ஏற்கனவே சவுதி அரேபியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் வைத்துள்ளதால், அமெரிக்கா - ஈரான் இடையேயான மோதலில் தான் சிக்க நேரிடலாம் என பாகிஸ்தான் அஞ்சுகிறது. ஈரானின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் குவைத்திற்கு படைகளை அனுப்பினால் அது தேவையற்ற விளைவுகளை ஏற்படுத்தும் என பாகிஸ்தான் நினைக்கிறது.

மாற்றுத்திட்டம்

படைகளை அனுப்புவதற்கு பதிலாக, குவைத்திற்கு ராணுவ பயிற்சி மற்றும் உளவுத்துறை தகவல்களை பகிர்ந்து கொள்ளும் 5 ஆண்டு கால பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு குவைத் ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் படைகளுக்குப் பதிலாக, குவைத்திடமிருந்து பெருமளவில் எரிசக்தி முதலீடுகளை பெற பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

பிராந்திய அரசியல் சூழலை கருத்தில் கொண்டு, குவைத்திற்கு ராணுவ வீரர்களை அனுப்ப பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்து இருப்பது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com