

மெக்சிகோ சிட்டி
மெக்சிகோ கரீபியன் கடற்கரையில் குவிந்த 1.05 லட்சம் டன் பாசிகளால் சுற்றுலாத்துறை பாதிக்கப்பட்டு உள்ளது.
மெக்சிகோ நாட்டின் கரீபியன் கடற்கரைகள் பகுதிகளில் ஆண்டுதோறும் பருவ காலங்களில் சுற்றுலாவாசிகள் குவிவது வழக்கம். இந்த நிலையில், கரீபியன் கடற்கரை பகுதிகளில் அதிக அளவில் பழுப்பு நிற பாசிகள் குவிந்துள்ளன. அது அழுகி, அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.
இது சுற்றுலா துறையை பாதித்துள்ளது. இதுபற்றி குயின்டானா ரூ பகுதியின் அதிகாரிகள் கூறும்போது, கான்கன், பிளேயா டெல் கார்மன் மற்றும் துலும் உள்ளிட்ட பகுதிகளில் 1.05 லட்சம் டன் அளவுக்கு நடப்பு ஆண்டில் சர்காசம் எனப்படும் இந்த பாசிகள் நீக்கப்பட்டு உள்ளன. இது கடந்த ஆண்டில் இருந்த அளவை (92,783 டன்கள்) விட சற்று அதிகம் என்றனர்.
எனினும், நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ் உள்பட உரத்திற்கு தேவையான ஊட்டச்சத்துகள் இதில் இருக்கும் எனபதற்காக இதனை வேளாண் உரங்களாக உபயோகிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதில் இருந்து வெளிப்படும் ஹைட்ரஜன் சல்பைடு வாயுவால் மூக்கை துளைக்கும் நெடி ஏற்பட்டு, சுற்றுலாவாசிகளை திணற செய்கிறது. இதனால் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து சுற்றுலாத்துறை பாதிக்கப்பட்டுள்ளது.
இவற்றை உரம், உயிரி எரிபொருள் மற்றும் உயிரி பிளாஸ்டிக்குகளாக மாற்றுவது தொடர்பான புதிய திட்ட பணிகள் பற்றி ஆராயப்பட்டு வருகின்றன.