

டோக்கியோ,
ஜப்பானில் சுமார் 360 டன் எடை கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க ஹிரோசாகி கோட்டையை சுமார் 1,800 நபர்கள் ஒன்றிணைந்து கயிற்றால் கட்டி, 2 மீட்டருக்கும் அதிகமான தூரம் வெற்றிகரமாக இழுத்து நகர்த்தியுள்ளனர்.
ஜப்பான் நாட்டில் கடந்த 2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், வரலாற்றுச் சிறப்புமிக்க ஹிரோசாகி கோட்டையின் அடிப்பகுதியில் இருந்த கல் சுவர்கள் பலத்த சேதமடைந்தன. அந்தச் சுவர்களைப் பலப்படுத்துவதற்காக, கடந்த 2015-ம் ஆண்டு அக்கோட்டை இடிக்கப்படாமல், அப்படியே பாதுகாப்பாக 78 மீட்டர் தூரத்திற்கு தற்காலிகமாக நகர்த்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது அடிப்பகுதி சுவர்கள் முழுமையாகச் சீரமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, கோட்டையை மீண்டும் அதன் பழைய இடத்திற்கே கொண்டு செல்லும் பணிகள் தொடங்கியுள்ளன.
பிரம்மாண்டமான கட்டிடங்களை உடைக்காமல் அப்படியே நகர்த்துவதற்காக, ஜப்பானின் பாரம்பரிய தொழில்நுட்பமான 'ஹிக்கியா' என்ற முறை இங்கு பயன்படுத்தப்பட்டது. கட்டிடத்தின் அடியில் நவீன உருளைகள் மற்றும் தண்டவாளங்கள் போன்ற அமைப்புகளை ஏற்படுத்தி, பின்னர் மனித ஆற்றல் மற்றும் இயந்திரங்கள் மூலம் அது நகர்த்தப்படுகிறது.
கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்ற இந்த அரிய நிகழ்வில், உள்ளூர் மக்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் என சுமார் 1,800 தன்னார்வலர்கள் பங்கேற்றனர். அவர்கள் 80 பேர் கொண்ட குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, 30 மீட்டர் நீளமுள்ள தடிமனான கயிறுகளைப் பிடித்து, பாரம்பரிய உற்சாகக் குரல்களான "சோ-ரே, சோ-ரே" என கோஷமிட்டு கோட்டையை இழுத்தனர். 2 நாட்கள் நடைபெற்ற இந்த கூட்டு முயற்சியின் மூலம், முதல் நாளில் 1.13 மீட்டரும், இரண்டாம் நாளில் 1.09 மீட்டரும் என மொத்தம் 2.22 மீட்டர் தூரத்திற்கு கோட்டை நகர்த்தப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் மாத இறுதிக்குள் சுமார் 4,100 மக்கள் பங்கேற்புடன் இக்கோட்டை 5 மீட்டர் வரை நகர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, மீதமுள்ள 73 மீட்டர் தூரத்தை நவீன இயந்திரங்களின் உதவியுடன் நகர்த்தி, இந்த ஆண்டின் இறுதிக்குள் ஹிரோசாகி கோட்டை அதன் பழைய இடத்திலேயே முழுமையாக நிலைநிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் இந்த கூட்டு முயற்சி உலக அளவில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.