

ஆனால் ராணுவம் இந்தப் போராட்டத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி வருகிறது. ராணுவ ஆட்சி தொடங்கியதில் இருந்து தற்போது வரை போராட்டக்காரர்கள் மீது ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 400-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் சர்வதேச அளவில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.இந்த நிலையில் மியான்மர் விவகாரம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இங்கிலாந்து தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தது.
மியான்மரில் மோசமடைந்து வரும் சூழ்நிலை குறித்து கவலையை வெளிப்படுத்தவும், மிகவும் கட்டுப்பாட்டுடன் செயல்படுவதோடு பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண மியான்மர் ராணுவத்தை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அழைக்கவும் இந்தத் தீர்மானம் வலியுறுத்தியது. 15 உறுப்பினர்களை கொண்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. அதனை தொடர்ந்து போராட்டக்காரர்கள் மீதான அடக்குமுறை தொடர்பாக மியான்மர் ராணுவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வன்முறையில் இருந்து உடனடியாக விலகவும், மனித உரிமைகளை முழுமையாக மதிக்கவும் வலியுறுத்தியது.