லெபனான் மீது இஸ்ரேல் விமானப்படை தாக்குதல்: ஹிஸ்புல்லா தளபதி பலி

லெபனான் மீது இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா ஆயுதக்குழு தளபதி உயிரிழந்தார்.
லெபனான் மீது இஸ்ரேல் விமானப்படை தாக்குதல்: ஹிஸ்புல்லா தளபதி பலி
Published on

பெரூட்,

பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்துவரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.

மேலும், இஸ்ரேலில் இருந்து 240 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் ஒப்பந்த அடிப்படையில் பணய கைதிகள் 100க்கும் மேற்பட்டோரை மீட்டுள்ளது. மேலும், 120 பேர் இன்னும் பணய கைதிகளாக உள்ளதாகவும், அதில் சிலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இதனிடையே, பணய கைதிகளை மீட்கவும், ஹமாஸ் ஆயுதக்குழுவினரை ஒழிக்கும் நடவடிக்கையிலும் காசா முனை மீது இஸ்ரேல் போர் தொடுத்துள்ளது. இந்த போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 36 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், மேற்குகரையில் ஏற்பட்ட மோதலில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, இந்த போரில் லெபனானில் செயல்பட்டுவரும் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா ஆயுதக்குழு ஹமாசுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது. ஹமாசுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது அவ்வப்போது ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்தி வருகிறது. ஹிஸ்புல்லா தாக்குதலுக்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது.

இந்நிலையில், லெபனான் மீது இஸ்ரேல் விமானப்படை நேற்று இரவு அதிரடி தாக்குதல் நடத்தியது. தெற்கு லெபனானின் ஜொலியா என்ற கிராமத்தில் உள்ள ஒரு வீட்டை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவின் தளபதி அபுதலிப் உயிரிழந்தார். அவருடன் ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினர் மேலும் 3 பேர் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா ராக்கெட் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் இஸ்ரேலின் சில பகுதிகளில் தீ விபத்து சம்பவங்களும் ஏற்பட்டுள்ளது. மேலும், இஸ்ரேல் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துவோம் என்று ஹிஸ்புல்லா எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், இஸ்ரேல் - லெபனான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com