

ஸ்பெயின்,
ரஷியாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே 4 ஆண்டுகளாக போர் நடந்து வருகிறது. உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் காரணமாக இருதரப்பிலும் ஆயிரக்கணக்கான வீரர்கள் பலியாகி உள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் தங்கள் இருப்பிடம், உடமைகள் உள்ளிட்டவற்றை இழந்து பல்வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.
இந்த போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றிபெறவில்லை. போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என பலமுறை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி விருப்பம் தெரிவித்துள்ளார். இருப்பினும் இரு நாடுகளும் பரஸ்பரம் தாக்குதலை தொடர்ந்து வருகின்றன.
இந்த நிலையில், ரஷ்யாவுடன் போர் புரிந்து வரும் உக்ரைனுக்கு சுமார் ரூ.9 ஆயிரம் கோடி (100 கோடி யூரோ) மதிப்பிலான புதிய ராணுவ உதவிகளை வழங்க ஐரோப்பிய நாடான ஸ்பெயின் முன்வந்துள்ளது. ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இடையே கையெழுத்தான ஒப்பந்தப்படி, ஏவுகணைகள் மற்றும் நவீன ஆயுதங்கள் உக்ரைனுக்கு வழங்கப்பட உள்ளன. "போர் முடியும் வரை உக்ரைனுக்கு எங்கள் ஆதரவு தொடரும்" என ஸ்பெயின் உறுதி அளித்துள்ளது.