

டோக்கியோ
ஜப்பானில் ரூ.9.56 கோடி மதிப்பிலான போதைப்பொருளை கடத்த முயற்சித்த 2 அமெரிக்க இளம்பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து விமானம் ஒன்று ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் உள்ள ஹனிடா விமான நிலையத்திற்கு வந்திறங்கியது. அதில் இருந்து இறங்கிய 25 வயதுடைய 2 இளம்பெண்களின் சூட்கேஸ்களை அதிகாரிகள் பரிசோதனை செய்தனர்.
அப்போது, அதில் கஞ்சா போன்ற செடி காய்ந்த நிலையில் இருந்தது கண்டறியப்பட்டது. அவை போதைப்பொருட்கள் என தெரிய வந்தது. அவற்றை வெளியே தெரியாமல் மறைவாக பதுக்கி வைத்து கடத்தியுள்ளனர்.
அவர்கள் இருவரையும் அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்து சென்றனர். அந்த போதைப்பொருட்களின் எடை 30 கிலோ இருக்கும் என கூறப்படுகிறது. அவை சர்வதேச அளவில் ரூ.9.56 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டு உள்ளது.
அந்த பெண்களில் ஒருவர், இலவச விமான பயணம் மற்றும் பணம் கிடைக்கும் என்பதற்காக இந்த கடத்தலில் ஈடுபட்டேன் என கூறினார். மற்றொரு இளம்பெண்ணோ சூட்கேசுக்குள் இருப்பது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என கூறியுள்ளார். அவர்கள் இருவரும் சட்டவிரோத செயல்களுக்காக கைது செய்யப்பட்டனர்.
ஜப்பானில் போதைப்பொருள் கடத்தல் சட்டவிரோத செயலாகும். அதனால், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதற்காக அந்நாட்டு சட்டப்படி, அமெரிக்க இளம்பெண்கள் 2 பேருக்கும் 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.18 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.