சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா 3-ந் தேதி தொடங்குகிறது

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா 3-ந் தேதி தொடங்குகிறது.
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா 3-ந் தேதி தொடங்குகிறது
Published on

திருச்சி,

அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில். இக்கோவிலில் எழுந்தருளி உள்ள மாரியம்மன், தனது சுயம்பு திருமேனியில் நவகிரகங்கள் மற்றும் 27 நட்சத்திரங்களின் ஆதிக்கங்களையும், எந்திரங்களாக திருமேனி பிரதிஷ்டையில் உள்ளடக்கி சக்தி தலங்களில் ஆதிபீடமாக, சுயம்பு வடிவமாக அஷ்டபுஜங்களுடன் அருள்பாலிக்கிறார்.

ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாத அமாவாசைக்கு மறுதினம் பிரதமை முதல் நவமி வரை தேவி பாகவதம், அக்னி புராணம், தேவி மகாத்மியம் ஆகிய புராணக் கூற்றுகளின்படி அதர்மமான மகிஷா சூரனை அழிக்க ஊசி முனையில் துர்க்கை, மகாலட்சுமி, சரஸ்வதி என முறையே முதல், நடு, கடை என மும்மூன்று நாட்களாக 9 நாட்கள் கடும் தவம் புரிந்து 10-வது நாள் விஜயதசமி அன்று வெற்றி பெற்ற திருநாளை நவராத்திரி பெருவிழாவாக கொண்டாடுவது இத்தலத்தின் மரபு.

அதன்படி நவராத்திரி விழா வருகிற அக்டோபர் மாதம் 3-ந்தேதி தொடங்கி 11-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில் 3-ந்தேதி அம்மன் குமாரிகா அலங்காரத்திலும், 4-ந்தேதி திரிமூர்த்தி அலங்காரத்திலும், 5-ந்தேதி கல்யாணி அலங்காரத்திலும் (துர்க்கை அம்சம்) எழுந்தருளுகிறார். 6-ந்தேதி ரோகினி அலங்காரத்திலும், 7-ந்தேதி காளகா அலங்காரத்திலும், 8-ந்தேதி சண்டிகா அலங்காரத்திலும் (மகாலட்சுமி அம்சம்) அம்மன் எழுந்தருளுகிறார்.

9-ந்தேதி சாம்பவி அலங்காரத்திலும், 10-ந்தேதி துர்கா அலங்காரத்திலும், 11-ந்தேதி சுபத்ரா அலங்காரத்திலும் (சரஸ்வதி அம்சம்) அம்மன் அருள்பாலிக்கிறார். 12-ந்தேதி விஜயதசமி அன்று அம்மன் வேடுபரி அலங்காரத்தில் எழுந்தருளுகிறார். அன்று இரவு அம்மன் வெள்ளிக்குதிரை வாகனத்தில் புறப்பாடாகி வன்னி மரம் சென்றடைகிறார். இதையடுத்து அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாள் இரவும் பரதநாட்டியம் மற்றும் பக்தி இன்னிசை கச்சேரி நடைபெறுகிறது.

இதேபோல் இனாம் சமயபுரத்தில் உள்ள ஆதி மாரியம்மன் கோவிலிலும் நவராத்திரி விழா 3-ந்தேதி தொடங்கி 11-ந்தேதி வரை நடைபெற உள்ளது. 12-ந்தேதி அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்று இரவு ஆதிமாரியம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை சமயபுரம் மாரியம்மன் கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் இளங்கோவன், கோவில் இணை ஆணையர் பிரகாஷ், அறங்காவலர்கள், கோவில் பணியாளர்கள் மற்றும் அர்ச்சகர்கள் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com