

கிங்ஸ்டன்,
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் கமிந்து மெண்டிஸின் அரைசதத்தின் உதவியுடன் இலங்கை அணி 147 ரன்கள் எடுத்துள்ளது.
ஜமைக்காவின் கிங்ஸ்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
இலங்கை அணியின் தொடக்கம் ஏமாற்றமாக அமைந்தது. தொடக்க வீரர் பதும் நிசாங்கா 18 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த லசித் க்ரூஸ்புல்லே டக் அவுட்டாக வெளியேறினார். தொடர்ந்து பவன் ரத்நாயக்கவும் 4 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இதனால் பவர்பிளே முடிவில் இலங்கை அணி 3 விக்கெட்டுகளை இழந்து 56 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
அணி தடுமாறிய நிலையில், மறுமுனையில் நிலைத்து நின்ற குசல் மெண்டிஸ் பொறுப்புடன் விளையாடி 23 பந்துகளில் 36 ரன்கள் சேர்த்தார். எனினும், நல்ல தொடக்கத்தை பெரிய இன்னிங்ஸாக மாற்ற முடியாமல் அவர் ஆட்டமிழந்தார்.
இதன்பின் கமிந்து மெண்டிஸ் மற்றும் தசுன் ஷனகா ஜோடி இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்டது. இருவரும் நிதானமாக ரன்கள் சேர்த்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 23 பந்துகளில் 22 ரன்கள் எடுத்திருந்த ஷனகா ஆட்டமிழந்தாலும், கமிந்து மெண்டிஸ் தனது சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்தார்.
ஷனகா வெளியேறிய பிறகு வனிந்து ஹசரங்காவுடன் ஜோடி சேர்ந்த கமிந்து மெண்டிஸ், இன்னிங்ஸை சிறப்பாக வழிநடத்தினார். ஒரு முனையில் நிதானமாக விளையாடிய அவர் அரைசதம் கடந்து அணிக்கு முக்கியமான ரன்களை சேர்த்தார்.
இறுதி ஓவரில் கமிந்து மெண்டிஸ் ரன் அவுட்டாக, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து இலங்கை அணி 147 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கமிந்து மெண்டிஸ் 51 ரன்கள் சேர்த்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஷமார் ஜோசப் மற்றும் ஹோல்டர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து, 148 ரன்கள் என்ற இலக்கை நோக்கி வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்க உள்ளது.